பீகார் சட்டசபை தேர்தல்; வாக்கு பதிவு தொடங்கியது


பீகார் சட்டசபை தேர்தல்; வாக்கு பதிவு தொடங்கியது
x
தினத்தந்தி 3 Nov 2020 1:32 AM GMT (Updated: 3 Nov 2020 1:32 AM GMT)

பீகார் சட்டசபை தேர்தலை முன்னிட்டு இன்று காலை வாக்கு பதிவு தொடங்கியது.

பாட்னா,

பீகாரில் முதல் மந்திரி நிதிஷ்குமார் தலைமையிலான பா.ஜ.க. கூட்டணியுடன் ஆளும் ஐக்கிய ஜனதாதள கட்சியின் 5 ஆண்டு கால ஆட்சி நிறைவடைய உள்ள நிலையில் அம்மாநில சட்டசபைக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது.  இதன்படி, முதல் கட்ட தேர்தல், கடந்த 28-ந் தேதி நடந்து முடிந்தது. 2-ம் கட்ட தேர்தல், இன்று நடக்கிறது.

17 மாவட்டங்களில் அடங்கி உள்ள 94 சட்டசபை தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடக்கிறது.  இதன்படி, இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.

இந்த தொகுதிகளில் 2 கோடியே 85 லட்சத்து 50 ஆயிரத்து 285 வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் ஆண்கள் 1 கோடியே 50 லட்சத்து 33 ஆயிரத்து 34 பேர். பெண்கள் 1 கோடியே 35 லட்சத்து 16 ஆயிரத்து 271 பேர். திருநங்கையர் 980 பேர்.

41 ஆயிரத்து 362 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 1,463 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களில் 1,316 பேர் ஆண்கள், 146 பேர் பெண்கள் ஆவர்.

மகராஜ்கஞ்ச் தொகுதியில் அதிகபட்சமாக 27 வேட்பாளர்களும், தராலி (தனி) தொகுதியில் குறைந்தபட்சமாக 4 வேட்பாளர்களும் உள்ளனர்.

ராஷ்டிரீய ஜனதாதளத்தின் முதல்-மந்திரி வேட்பாளர் தேஜஸ்வி யாதவ், அவருடைய அண்ணன் தேஜ்பிரதாப் யாதவ், சத்ருகன் சின்காவின் மகன் லவ் சின்கா ஆகியோர் 2-ம் கட்ட தேர்தலை சந்திப்பவர்களில் முக்கிய வேட்பாளர்கள் ஆவர். முதல்-மந்திரி நிதிஷ்குமாரின் சொந்த கிராமம் அமைந்துள்ள ஹரானட் தொகுதியிலும் தேர்தல் நடக்கிறது.

தேர்தல் நடக்கும் பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. முக கவசம், சமூக இடைவெளி, கிருமி நாசினி, வாக்காளர்களுக்கு ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் கையுறை வழங்குதல் உள்ளிட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பீகாரில், 3-வது மற்றும் இறுதிக்கட்ட தேர்தல் 7-ந் தேதி நடக்கிறது. வாக்கு எண்ணிக்கை 10-ந் தேதி நடக்கிறது.

இந்த 2வது கட்ட தேர்தலில் ஆளுனர் பகு சவுகான், முதல் மந்திரி நிதிஷ் குமார், துணை முதல் மந்திரி சுஷில் குமார் மோடி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் வாக்களிக்க உள்ளனர்.

Next Story