ஜம்மு காஷ்மீர்: குப்கார் கூட்டமைப்புடன் இணைந்து காங்கிரஸ் போட்டியிடும் - பரூக் அப்துல்லா


ஜம்மு காஷ்மீர்:  குப்கார் கூட்டமைப்புடன் இணைந்து காங்கிரஸ் போட்டியிடும் - பரூக் அப்துல்லா
x
தினத்தந்தி 9 Nov 2020 7:32 AM GMT (Updated: 9 Nov 2020 7:32 AM GMT)

ஜம்மு காஷ்மீர் வட்டார வளர்ச்சி கவுன்சில் தேர்தலில் காங்கிரஸ் கட்சி எங்கள் அமைப்புடன் இணைந்தே போட்டியிடும் என பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

ஸ்ரீநகர்,

ஜம்மு, காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்த​ஸ்தை கடந்த ஆண்டு மத்திய அரசு ரத்து செய்ததுடன், அந்த மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அனைத்து எதிர்க்கட்சி தலைவர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டனர். 

 உச்சநீதிமன்ற தலையீட்டைத் தொடர்ந்து வீட்டுச் சிறையில் உள்ளவர்கள் விடுவிக்கப்பட்டனர். இதையடுத்து,   அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முன்மொழியப்பட்ட குப்கார் பிரகடனத்தை வென்றெடுக்க மக்கள் முன்னணியை  அங்குள்ள பிரதான கட்சிகள்  இணைந்து அமைத்துள்ளன. இந்த அமைப்பின் தலைவராக பரூக் அப்துல்லா உள்ளார். 

இந்த நிலையில், ஜம்மு காஷ்மீரில் விரைவில் நடைபெற உள்ள வட்டார வளர்ச்சி கவுன்சில் தேர்தலில் குப்கார் பிரகடனத்திற்கான மக்கள் கூட்டணியுன்  காங்கிரஸ் இணைந்து போட்டியிடும் என்று பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார். 

ஸ்ரீநகரில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த பரூக் அப்துல்லா கூறும் போது, “ நாங்கள் எப்போது விலகினோம்?  தவறான புரிதல் இருக்கக் கூடாது. இந்த கூட்டணியில் காங்கிரசும் ஒரு அங்கம் தான். வட்டார வளர்ச்சி கவுன்சில் தேர்தலில் இணைந்தே போட்டியிடுவோம்” என்றார். 

வட்டார வளர்ச்சி கவுன்சில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களைக் காங்கிரஸ் தனியாக அறிவித்த நிலையில், பரூக் அப்துல்லா மேற்கண்டவாறு கூறியுள்ளது அம்மாநில அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 


Next Story