லடாக் - ஜம்மு காஷ்மீர் வரைபட சர்ச்சையில் டுவிட்டர் மீது இந்திய அரசு நடவடிக்கை எடுக்குமா...?


லடாக் - ஜம்மு காஷ்மீர் வரைபட சர்ச்சையில் டுவிட்டர் மீது இந்திய அரசு நடவடிக்கை எடுக்குமா...?
x
தினத்தந்தி 13 Nov 2020 4:00 AM GMT (Updated: 13 Nov 2020 4:00 AM GMT)

லடாக் - ஜம்மு காஷ்மீர் வரைபட சர்ச்சையில் டுவிட்டர் மீது இந்திய அரசு அனுப்பி உள்ள நோட்டீசில் ஏன் நடவடிக்கை எடுக்க கூடாது என கேட்டு உள்ளது.

புதுடெல்லி

லடாக் யூனியன் பிரதேசத்துக்குள் இருக்க வேண்டிய லே பகுதியை ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச வரைபடத்தில் இடம்பெறச் செய்த சர்ச்சைக்குரிய விவகாரத்துக்கு தீர்வு காண வரும் நவம்பர் இறுதி வரை அவகாசம் வழங்குமாறு டுவிட்டர் நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது.

இது தொடர்பாக டுவிட்டர் நிறுவனத்துக்கு இந்திய மின்னணு, தொழில்நுட்பத்துறை அமைச்சகம் அனுப்பியுள்ள நோட்டீசில், டுவிட்டர் நிறுவன நடவடிக்கை, இந்திய நாடாளுமன்ற இறையாண்மையை களங்கப்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக ஏன் கருதக்கூடாது என்று கேட்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் ஐந்து நாட்களுக்குள் பதில் அளிக்குமாறு டுவிட்டர் நிறுவன துணைத் தலைவருக்கு அனுப்பிய நோட்டீஸில் கூறப்பட்டுள்ளது. தவறான வரைபடத்தை காண்பிக்கும் விவகாரத்தில் உரிய பதில் அளிக்காவிட்டால் உங்கள் நிறுவனம் மீது சட்ட நடவடிக்கையை ஏன் மேற்கொள்ளக்கூடாது என்றும் அந்த நோட்டீசில் கேட்கப்பட்டு இருந்தது.

அரசாங்கத்தின் உயர்மட்ட வட்டாரங்கள் இந்த விஷயத்தை "இந்திய இறையாண்மை பாராளுமன்றத்தின் விருப்பத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் டுவிட்டரின் திட்டமிட்ட முயற்சி" என்று கருதினர்.

இந்தியாவின் வரைபடத்தை சேதப்படுத்தியதற்காக குற்றவியல் சட்ட திருத்தச் சட்டம், 1961 இன் கீழ், இந்தியாவில் டுவிட்டர் தலைவருக்கு எதிராக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யலாம். இந்த விதியின் கீழ் ஆறு மாத சிறை விதிக்கலாம்.

அரசாங்கத்தால் பிற சட்ட நடவடிக்கை ஐடி சட்டத்தின் பிரிவு 69 ஏ வடிவத்தில் எடுக்கப்படலாம். "இந்தியாவின் பிராந்திய ஒருமைப்பாட்டை கேள்விக்குள்ளாக்குவதற்கோ அல்லது பிராந்திய ஒருமைப்பாட்டை அச்சுறுத்தும் உள்ளடக்கத்தைக் காண்பிப்பதற்கோ இந்த விதியின் கீழ் நிறுவனத்தின் பயன்பாடு அல்லது வலைத்தளத்திற்கான அணுகலைத் தடுக்க முடியும்," என்று அந்த வட்டாரம் கூறியது.

இது தொடர்பான மின்னஞ்சல் செய்திக்குறிப்பில் இந்திய அரசுக்கு அனுப்பிய பதில் குறித்து டுவிட்டர் நிறுவன செய்தித்தொடர்பாளர் கூறும் போது

மக்கள் உரையாடல் தொடர்பான சேவையை வழங்குவதில் இந்திய அரசு, இந்திய மின்னணு, தொழில் நுட்பத்துறையுடன் இணைந்து மேற்கொள்ளும் பணியில் டுவிட்டர் நிறுவனம் காட்டும் ஈடுபாடு தொடரும். இந்திய அரசு அனுப்பியுள்ள நோட்டீசுக்கு உரிய பதிலை அனுப்பியுள்ளோம்.

ஜியோ டேக் பிரச்சினை தொடர்பான சமீபத்திய முன்னேற்றங்கள், தரவுகளின் விவரத்தை நாங்கள் இந்திய அரசிடம் பகிர்ந்துள்ளோம் என்று அந்த செய்திக்குறிப்பில் கூறி உள்ளார்.

Next Story