சசிகலா விடுதலை : சட்டப்படியே முடிவு - கர்நாடக உள்துறை மந்திரி பசவராஜ் பொம்மை


சசிகலா விடுதலை : சட்டப்படியே முடிவு - கர்நாடக உள்துறை மந்திரி பசவராஜ் பொம்மை
x
தினத்தந்தி 20 Nov 2020 7:27 AM GMT (Updated: 20 Nov 2020 7:37 AM GMT)

சசிகலா விடுதலை விவகாரத்தில் சட்டப்படியே முடிவு செய்யப்படும் என்று கர்நாடக உள்துறை மந்திரி பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.

பெங்களூரு,

நன்னடத்தை அடிப்படையில் சசிகலாவை விடுவிக்க அவரது வழக்கறிஞர் ராஜாசெந்தூர்பாண்டியன் கோரிக்கை விடுத்து இருந்தார். சசிகலாவுக்கு 129 நாட்கள் சிறைவிடுப்பு இருப்பதால் அவர் முன்கூட்டியே விடுவிக்கப்படுவார் என தகவல் வெளியானது. 

இந்நிலையில் கர்நாடக உள்துறை மந்திரி பசவராஜ் பொம்மை செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையிலுள்ள சசிகலாவுக்கு விடுதலையில் சிறப்பு சலுகை கிடையாது. நீதிமன்ற தீர்ப்பின்படியும், சிறைச்சாலை விதியின் அடிப்படையிலுமே சசிகலா விடுதலை செய்யப்படுவார். சசிகலா முன்கூட்டியே விடுதலை செய்வது தொடர்பான விவகாரத்தில் கூடுதல் சலுகைகள் எதுவும் வழங்கப்படமாட்டாது. சசிகலாவின் விடுதலை சட்டப்படியே முடிவு செய்யப்படும் என்றார்.

சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு, பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா தனக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகை ரூ. 10 கோடியே 10 ஆயிரத்தை நீதிமன்றத்தில் செலுத்தினார்.

இதையடுத்து, நன்னடத்தை விதிகளின் அடிப்படையில் அவரை முன்கூட்டியே விடுதலை செய்யுமாறு சிறைத் துறை நிர்வாகத்திடம், சசிகலாவின் வழக்குரைஞர் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

சிறைத்துறை விதிகளின்படி சொத்துக் குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனைப் பெற்ற சசிகலாவுக்கு, 129 நாள்கள் சிறை விடுப்பு இருப்பதால், அவரை முன்கூட்டியே விடுதலை செய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில், கர்நாடக உள்துறை மந்திரி பசவராஜ் பொம்மையின் பதில் மூலம், சசிகலா ஜனவரி மாதத்தில் தான் விடுதலையாவார் என்பது திட்டவட்டமாக தெரிய வந்துள்ளது.

Next Story