டெல்லியில் சர்வதேச தங்க கடத்தல் முறியடிப்பு; 6 கிலோ தங்கம் பறிமுதல்
டெல்லி ரெயில் நிலையத்தில் சர்வதேச தங்க கடத்தலில் ஈடுபட்ட நபரை கைது செய்து ரூ.3.25 கோடி மதிப்பிலான 6 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
புதுடெல்லி,
டெல்லி ரெயில் நிலையத்தில் சந்தேகத்திற்குரிய வகையிலான பயணி ஒருவரை ரோந்து போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். இதில், அந்த நபர் விசேஷ உடையில் தங்க கட்டிகளை மறைத்து கடத்தியது தெரிய வந்தது.
அவர் மும்பையை சேர்ந்த பிரவீன் குமார் அம்பாலால் கான்டல்வால் (வயது 37) என தெரிய வந்தது. அவரிடம் இருந்து வளைகுடா நாட்டு குறியீடுகளை கொண்ட 6.292 கிலோ எடை கொண்ட தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ.3.25 கோடி இருக்கும் என கூறப்படுகிறது.
விமான நிலையங்களில் சோதனை நடத்தினால் கண்டறியப்படலாம் என்பதற்காக அதனை தவிர்க்க ரெயிலில் அந்நபர் பயணம் செய்துள்ளார். இதேபோன்று மெட்டல் டிடெக்டர் சோதனையை தவிர்க்க ஹவுரா ரெயில் நிலையத்திற்கு செல்லாமல் தவிர்த்து உள்ளார்.
இந்த நபர் கொல்கத்தாவில் உள்ள தனது கூட்டாளியிடம் இருந்து தங்க கட்டிகளை பெற்று கொண்டு மேற்கு வங்காளத்தின் அசன்சோல் நகரில் ரெயிலில் ஏறியுள்ளார். தொடர்ந்து மும்பை சென்று நகைக்கடைக்காரர்களிடம் அவற்றை வழங்க வேண்டிய பொறுப்பினை ஏற்றுள்ளார் என்பது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த தங்க கடத்தலுக்கு பின்னணியில் செயல்படுபவர்களை கண்டறியும் விசாரணையும் தொடர்ந்து நடந்து வருகிறது.
Related Tags :
Next Story