பொருளாதாரம், வெளியுறவு, தேச பாதுகாப்பு பற்றி விவாதிக்க காங்கிரசில் 3 புதிய குழுக்கள் நியமனம்


பொருளாதாரம், வெளியுறவு, தேச பாதுகாப்பு பற்றி விவாதிக்க காங்கிரசில் 3 புதிய குழுக்கள் நியமனம்
x
தினத்தந்தி 20 Nov 2020 7:14 PM GMT (Updated: 20 Nov 2020 7:14 PM GMT)

பொருளாதார விவகாரங்களுக்கான குழுவில் முன்னாள் மத்திய மந்திரிகள் ப.சிதம்பரம், மல்லிகார்ஜுன கார்கே மற்றும் திக்விஜய்சிங் இடம்பெறுகிறார்கள்

புதுடெல்லி, 

பொருளாதாரம், வெளிநாட்டு விவகாரங்கள், தேச பாதுகாப்பு ஆகியவை தொடர்பான பிரச்சினைகள் மற்றும் கொள்கைகளை ஆய்வு செய்வதற்கும், விவாதிப்பதற்கும் 3 தனித்தனி குழுக்களை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அமைத்துள்ளார். 3 குழுக்களிலும் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்குக்கு இடம் அளிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார விவகாரங்களுக்கான குழுவில் முன்னாள் மத்திய மந்திரிகள் ப.சிதம்பரம், மல்லிகார்ஜுன கார்கே மற்றும் திக்விஜய்சிங் இடம்பெறுகிறார்கள். இக்குழுவின் அமைப்பாளராக முன்னாள் மத்திய மந்திரி ஜெய்ராம் ரமேஷ் இருப்பார்.

வெளிநாட்டு விவகாரங்களுக்கான குழுவில் முன்னாள் மத்திய மந்திரிகள் ஆனந்த் சர்மா, சசிதரூர், சல்மான் குர்ஷித் மற்றும் சப்தகிரி உலகா ஆகியோர் இடம்பெறுகிறார்கள். சல்மான் குர்ஷித், இக்குழுவின் அமைப்பாளராக இருப்பார்.

தேச பாதுகாப்பு தொடர்பான குழுவில் நாடாளுமன்ற மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் குலாம்நபி ஆசாத், மூத்த தலைவர்கள் வீரப்ப மொய்லி, வின்சென்ட் எச்.பாலா, வி.வைத்திலிங்கம் ஆகியோர் இடம்பெறுகிறார்கள். இக்குழுவின் அமைப்பாளராக வின்சென்ட் எச்.பாலா இருப்பார்.

இத்தகவல்களை காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார். காங்கிரசுக்கு புத்துயிரூட்ட கட்சியை முற்றிலும் மாற்றி அமைக்க வேண்டும் என்று சில மாதங்களுக்கு முன்பு 23 மூத்த தலைவர்கள், கட்சி தலைமைக்கு கடிதம் எழுதியது பரபரப்பை ஏற்படுத்தியது. அப்படி கடிதம் எழுதிய குலாம்நபி ஆசாத், ஆனந்த் சர்மா, வீரப்ப மொய்லி, சசிதரூர் ஆகியோருக்கும் இந்த குழுக்களில் இடம் அளிக்கப்பட்டுள்ளது.


Next Story