“கோவிஷீல்டு தடுப்பூசி” பணிகளை 28-ம் தேதி ஆய்வு செய்கிறார் பிரதமர் மோடி


“கோவிஷீல்டு தடுப்பூசி” பணிகளை 28-ம் தேதி ஆய்வு செய்கிறார் பிரதமர் மோடி
x
தினத்தந்தி 26 Nov 2020 12:19 PM GMT (Updated: 26 Nov 2020 12:19 PM GMT)

புனேவில் கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசி பணிகளை வரும் 28-ம் தேதி பிரதமர் மோடி பார்வையிடுகிறார்.

புதுடெல்லி, 

உலகை இன்றளவும் அச்சுறுத்தி வருகிற கொரோனா வைரசை தடுத்து நிறுத்துவதற்காக இந்தியா உள்ளிட்ட முன்னணி நாடுகள் பலவும் தடுப்பூசிகளை உருவாக்கி அவற்றை மனிதர்களுக்கு செலுத்தி சோதித்து வருகின்றன.

இந்த வகையில் இங்கிலாந்து நாட்டின் பிரபல ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், அஸ்ட்ரா ஜெனேகா என்ற மருந்து நிறுவனமும் இணைந்து கூட்டாக கோவிஷீல்டு என்ற தடுப்பூசியை உருவாக்கி உள்ளன.  இந்தியாவில் இந்த தடுப்பூசியை புனேயை சேர்ந்த சீரம் இன்ஸ்டிடியுட் தயாரித்து, வினியோகிக்கும் உரிமையை பெற்றுள்ளது.

தற்போது சீரம் இன்ஸ்டிடியுட்டும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும் இந்தியாவில் 15 இடங்களில் கோவிஷீல்டு தடுப்பூசி பரிசோதனையை நடத்துகின்றன.

தற்போது உலகம் முழுவதும் கோவிஷீல்டின் 3-ம் கட்ட தடுப்பூசி சோதனை நடந்து வருகிறது. 

மூன்றாம் கட்ட சோதனையின் இடைக்கால முடிவுகளை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் சமீபத்தில் வெளியிட்டது. அவை 70% ஆற்றல் மிக்கவை என அதில் கூறப்பட்டுள்ளது. தடுப்பூசியை பிரித்தளிக்காமல் ஒரே முறையாக செலுத்தும் போது 90% வரை பயனளிப்பதாக கூறுகின்றன. 

131 கொரோனா நோயாளிகளிடம் நடந்த இறுதிகட்ட பரிசோதனையின் தரவுகளை கொண்டு அந்த அறிக்கை வெளியிடப்பட்டது. தடுப்பூசி செலுத்தப்பட்ட எவருக்கும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் சூழல் உண்டாகவில்லை, நோய் தீவிரமடையவில்லை என்றும் தெரிவித்திருந்தது. 

இந்த நிலையில் பிரதமர் மோடி வரும் 28-ம் தேதி புனேவிலுள்ள சீரம் இந்தியா நிறுவன ஆய்வகத்திற்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  இத்தகவலை புனே மாவட்ட அதிகாரி உறுதிப்படுத்தியுள்ளார். தடுப்பூசி தயாரிப்புகள், அவற்றின் பாதுகாப்பு, பக்கவிளைவுகள் குறித்து கேட்டறிவார் என்று தெரிகிறது. இந்தியாவிற்கு குறைந்த விலையிலும், முன்னுரிமை அடிப்படையிலும் தடுப்பூசி வழங்குவதற்கான வாய்ப்புகள் குறித்தும் விஞ்ஞானிகளுடன் விவாதிப்பார் என்று கூறப்படுகிறது.


Next Story