சூப்பர் ஸ்பெசாலிட்டி படிப்புகளில் அரசு டாக்டர்கள் சேர நடப்பாண்டு இடஒதுக்கீட்டுக்கு அனுமதி இல்லை - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு


சூப்பர் ஸ்பெசாலிட்டி படிப்புகளில் அரசு டாக்டர்கள் சேர நடப்பாண்டு இடஒதுக்கீட்டுக்கு அனுமதி இல்லை - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 27 Nov 2020 11:43 PM GMT (Updated: 27 Nov 2020 11:43 PM GMT)

சூப்பர் ஸ்பெசாலிட்டி மருத்துவ படிப்புகளில் சேர தமிழக அரசு டாக்டர்களுக்கு நடப்பாண்டு இடஒதுக்கீட்டை அனுமதிக்க முடியாது என சுப்ரீம் கோர்ட்டு தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி, 

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி நடப்பு கல்வியாண்டில் சூப்பர் ஸ்பெசாலிட்டி மருத்துவ மேற்படிப்புகளில் 50 சதவீத இடங்களை அரசு டாக்டர்களுக்கு ஒதுக்க உத்தரவிடக்கோரி தமிழக அரசு டாக்டர்கள் எம்.செய்யது பக்ரூதீன், ஜி.குமரவேல் உள்ளிட்டோர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்கு கடந்த 9-ந்தேதி விசாரணைக்கு வந்தபோது, அரசு டாக்டர்களுக்கு முதுநிலை மருத்துவ மற்றும் டிப்ளமோ சிறப்பு படிப்புகளில் உரிய இடஒதுக்கீடு அளிக்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது என சுப்ரீம் கோர்ட்டு சமீபத்தில் உத்தரவிட்டுள்ளதால், இந்த படிப்புகளுக்கு அரசு டாக்டர்களுக்கு 50 சதவீத இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும் என மனுதாரர் கள் தரப்பில் வாதிடப்பட்டது.

சுப்ரீம் கோர்ட்டில் இது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளதால், அதுவரை எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மத்திய அரசு வாதத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் வில்சன், சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ள வழக்குக்கும் இந்த வழக்குக்கும் எந்த தொடர்பும் இல்லை என வாதிட்டார்.

தொடர்ந்து தமிழக அரசு சார்பில் ஆஜரான அரசின் தலைமை வக்கீல் விஜய் நாராயண், இடஒதுக்கீடு வழங்க முடிவு செய்யப்பட்டு நவம்பர் 7-ந்தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறி அதை தாக்கல் செய்தார். மத்திய அரசின் வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், தமிழக அரசின் நிலைப்பாட்டை பதிவு செய்துகொண்டு வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

இந்த நிலையில், சூப்பர் ஸ்பெசாலிட்டி மருத்துவ மேற்படிப்புகளில் அரசு டாக்டர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க வகைசெய்யும் தமிழக அரசின் அரசாணையை உறுதிசெய்த சென்னை ஐகோர்ட்டு உத்தரவுக்கு எதிராக ஒடிசா, தமிழகம், உத்தரபிரதேசம், கர்நாடகா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த 13 தனியார் டாக்டர்கள் சார்பில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

அந்த மனுக்களை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி எல்.நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வு நேற்று அளித்த உத்தரவு வருமாறு:-

‘சூப்பர் ஸ்பெசாலிட்டி மருத்துவ படிப்புகளுக்கான சேர்க்கை கடந்த ஆகஸ்டு 3-ந்தேதி தொடங்கியது. இவற்றில் சேர எவ்வித இடஒதுக்கீடும் இல்லை என இதற்கான தேர்வு எழுதியவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், சூப்பர் ஸ்பெசாலிட்டி மருத்துவ படிப்புகளில் சேர அரசு டாக்டர்களுக்கு 50 சதவீத இடங்களை ஒதுக்கும் அரசாணையை தமிழக அரசு நவம்பர் 7-ந்தேதி பிறப்பித்தது. இந்த அரசாணை சூப்பர் ஸ்பெசாலிட்டி மருத்துவ படிப்புகளில் சேர தகுதிபெற்ற பிற மருத்துவர்களின் நலன்களை பாதிக்கிறது.

சூப்பர் ஸ்பெசாலிட்டி மருத்துவ படிப்புகளில் சேர அரசு டாக்டர்களுக்கு 50 சதவீத இடங்களை ஒதுக்க வகைசெய்யும் அரசாணையை அமல்படுத்தினால் யாருக்கும் பாதிப்பில்லை என்ற தமிழக அரசின் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல்கள் சி.எஸ்.வைத்தியநாதன், வி.கிரியின் வாதங்களை நாங்கள் ஏற்கமுடியாது.

தமிழக அரசின் அரசாணையை செயல்படுத்தினால் சூப்பர் ஸ்பெசாலிட்டி மருத்துவ படிப்புகளில் சேர பிற டாக்டர்களுக்கு வாய்ப்பு பறிபோகும். 2016-ம் ஆண்டிலிருந்து அரசு டாக்டர்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கப்படவில்லை. மருத்துவ மாணவர் சேர்க்கை நிறைவுகட்டத்தை எட்டியுள்ளதால், சூப்பர் ஸ்பெசாலிட்டி மருத்துவ படிப்புகளில் சேர அரசு டாக்டர்களுக்கு நடப்பாண்டு இடஒதுக்கீட்டை அனுமதிக்க முடியாது.

மருத்துவ படிப்புகளில் சேர அரசு டாக்டர்களுக்கு 50 சதவீத இடங்களை ஒதுக்க வகைசெய்யும் அரசாணையின் செல்லுபடிதன்மை குறித்து எவ்வித கருத்தையும் நாங்கள் தெரிவிக்கவில்லை என்பதை தெளிவுபடுத்துகிறோம்.

அரசு டாக்டர்களுக்கு இடஒதுக்கீடு வழங்காமல் நடப்பாண்டு சூப்பர் ஸ்பெசாலிட்டி படிப்புகளுக்கான 2020-21-ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையை நடத்த உத்தரவிடுகிறோம். மேற்கண்ட உத்தரவு நடப்பு ஆண்டுக்கு மட்டுமே பொருந்தும் என்பதையும் மீண்டும் வலியுறுத்துகிறோம்.

இந்த விவகாரம் தொடர்பான மேல்முறையீட்டு மனுக்களையும், ரிட் மனுக்களையும் 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் விசாரிக்கும்வகையில் பட்டியலிட உத்தரவிடுகிறோம்.

Next Story