நிவர் புயல்: ஆந்திராவில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு; முதல்-மந்திரி உத்தரவு


நிவர் புயல்:  ஆந்திராவில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு; முதல்-மந்திரி உத்தரவு
x
தினத்தந்தி 29 Nov 2020 1:16 AM GMT (Updated: 29 Nov 2020 1:16 AM GMT)

ஆந்திர பிரதேசத்தில் நிவர் புயல், கனமழையால் உயிரிழந்த குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க முதல்-மந்திரி உத்தரவிட்டார்.

அமராவதி,

வடகிழக்கு பருவமழையை தொடர்ந்து கடந்த சில நாட்களாக தமிழகம், புதுச்சேரி மற்றும் ஆந்திரா உள்ளிட்ட தென்பகுதி மாநிலங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது.  சமீபத்தில் வங்க கடலில் உருவான நிவர் புயல் புதுச்சேரி மற்றும் மரக்காணம் இடையே கரை கடந்து வடமேற்கு நோக்கி ஆந்திரா வழியே சென்றது.

இதனால் அடுத்த 2 அல்லது 3 நாட்களுக்கு கனமழை பெய்ய கூடும் என்ற சூழலில் ஆந்திராவில் அரசு அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.  மக்களை பாதுகாப்பிற்காக நிவாரண முகாம்களுக்கு கொண்டு சென்றனர்.

ஆந்திராவின் பல்வேறு பகுதிகளில் பயிரிடப்பட்ட விளை நிலங்கள் நிவர் புயலால் கடுமையாக சேதமடைந்து உள்ளன.  இதனால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டு உள்ளது.  ஆந்திர பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.  

இதனால் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்கி, 3 நாட்களில் சித்தூர் மாவட்டத்தில் 6 பேரும், கடப்பா மாவட்டத்தில் 2 பேரும் என மொத்தம் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனை தொடர்ந்து, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை வான் வழியே சுற்றி பார்த்த முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி, திருப்பதியில் அதுதொடர்பான ஆய்வுக்கூட்டம் ஒன்றை நடத்தினார்.  இதில் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டு புயல் பாதிப்பு பற்றி முதல்-மந்திரியிடம் விளக்கி கூறினர்.

அந்த கூட்டத்தில் கனமழை மற்றும் வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் வழங்கும்படி முதல் மந்திரி ஜெகன் உத்தரவிட்டார். மேலும் மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் அரசு நிவாரண முகாம்களில் தங்கியுள்ளவர்களுக்கு உதவித்தொகையாக தலா ரூ.500 வழங்கவும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

பயிர் இழப்பு கணக்கீடு பற்றி உடனடியாக அறிக்கை அளிக்கும்படி அதிகாரிகளிடம் கேட்டு கொண்டார்.  பாதிக்கப்பட்டவர்களை கவனமுடனும் மற்றும் மனிதநேய அடிப்படையிலும் நடத்த வேண்டும் என்றும் அவர் கேட்டு கொண்டார்.

Next Story