விவசாயிகள் போராட்டத்தில் தண்ணீர் பீய்ச்சியடிப்பதை தடுத்த இளைஞர் மீது வழக்குப்பதிவு


விவசாயிகள் போராட்டத்தில் தண்ணீர் பீய்ச்சியடிப்பதை தடுத்த இளைஞர் மீது வழக்குப்பதிவு
x
தினத்தந்தி 29 Nov 2020 10:25 AM GMT (Updated: 29 Nov 2020 10:25 AM GMT)

அரியானாவில் விவசாயிகள் நடத்திய போராட்டத்தின் போது தண்ணீர் பீய்ச்சியடிக்கும் வண்டி மீது ஏறி அதனை தடுத்து நிறுத்திய இளைஞர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சண்டிகர்,

மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து பஞ்சாப் மற்றும் அரியானாவைச் சேர்ந்த விவசாயிகள், 'டெல்லி சலோ' போராட்டத்தை 4 நாட்களாகத் தொடர்ந்து நடத்தி வருகின்றனர். டெல்லியில் போராட்டம் நடத்தும் நோக்கில் வந்த விவசாயிகள் காவல்துறையால் தடுத்து நிறுத்தி வருகின்றனர். 

இந்தநிலையில் விவசாயிகள் டெல்லி செல்வதை தடுக்க அரியானா போலீசார் எல்லையில் பல்வேறு தடுப்புகளை அமைத்து தடை விதித்திருந்தனர். அதையும் மீறி விவசாயிகள் முன்னேறியதை அடுத்து, நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர அவர்கள் மீது கண்ணீர் புகைக்குண்டு வீசி, தண்ணீரை பீய்ச்சியடித்தனர். 

அப்போது நவ்தீப்சிங், 26, என்னும் இளைஞர் ஒருவர் தண்ணீர் பீய்ச்சியடிக்கும் வண்டி மீது ஏறி  அதனை அணைத்துள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

அந்த வீடியோவில் தண்ணீரை அணைத்துவிட்டு அருகில் இருந்த டிராக்டர் மீது அவர் குதிப்பது போல் பதிவானது. 

இந்நிலையில் நவ்தீப் மற்றும் அவரது தந்தை ஜெய் சிங் ஜல்பேரா ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். போராட்டத்தின் போது இருவரும் டிராக்டருடன் வேகமாக வந்து போலீஸ்காரர்கள் மீது ஏற்ற முயன்றதாக இளைஞர் மீது குற்றம்  சாட்டப்பட்டுள்ளது.

இது குறித்து நவ்தீப் கூறியதாவது: 

கல்லூரியில் பட்டம் பெற்ற பிறகு, எனது தந்தையுடன் விவசாயம் செய்யத் தொடங்கினேன். எதிர்ப்பு தெரிவிக்கும் விவசாயிகளின் தண்ணீர் பீய்ச்சியடிக்கப்பட்டதால் அந்த குழாயை அணைக்க வேண்டும் என்ற தைரியம் கிடைத்தது.

நாங்கள் அமைதியாக டெல்லிக்குச் செல்ல முயன்றோம். ஆனால் போலீசார் எங்களை செல்ல விடாமல் தடுத்தனர். அரசுக்கு எதிராக கேள்வி எழுப்பவும், மக்கள் விரோதச் சட்டங்கள் இயற்றப்பட்டால் எதிர்ப்பதற்கும் எங்களுக்கு  உரிமை உள்ளது என்றார்.

Next Story