பிரதமர் மோடி தமது சொந்த தொகுதியான வாரணாசிக்கு இன்று செல்கிறார்


பிரதமர் மோடி தமது சொந்த தொகுதியான வாரணாசிக்கு இன்று செல்கிறார்
x
தினத்தந்தி 30 Nov 2020 12:00 AM GMT (Updated: 29 Nov 2020 7:21 PM GMT)

பிரதமர் நரேந்திர மோடி தமது சொந்த தொகுதியான வாரணாசிக்கு இன்று செல்கிறார்.

வாரணாசி, 

பிரதமர் நரேந்திர மோடி தனது சொந்த தொகுதியான வாரணாசிக்கு தேவ் தீபாவளி பண்டிகையை ஒட்டி இன்று (திங்கட்கிழமை) செல்கிறார். இதனால் வாரணாசியில் பல்வேறுவித அலங்காரங்களும், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

வாரணாசிக்கு 9 மாத கால இடைவெளிக்குப் பின் மோடி செல்கிறார். தேவ் தீபாவளி பண்டிகையில் அவர் கலந்துகொள்வது இதுவே முதல்முறை. இன்று பிற்பகல் 2 மணிக்கு வாரணாசியை அடையும் மோடி, அங்கு பல முக்கிய திட்டங்களை தொடங்கிவைக்கிறார், அடிக்கல் நாட்டுகிறார்.

பிரதமர் மோடி வாரணாசியில் உள்ள ராஜா தலாப் பகுதியில் இருந்து பிரயாக்ராஜ் வரையிலான தேசிய நெடுஞ்சாலையை ஆறுவழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்ட திட்டத்தை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

வாரணாசி கங்கை நதிக்கரையில் தீபங்களை ஏற்றிவைக்கும் அவர், ஒரு சிறு பொதுக்கூட்டத்திலும் பேசுகிறார். தொடர்ந்து கங்கை நதியில் படகுப் பயணம் மேற்கொள்ளும் மோடி, காசி விஸ்வநாதர் கோவிலில் வழிபடுகிறார். சாரநாத்தில் நடைபெறும் ஒளி, ஒலி காட்சியையும் அவர் பார்க்கிறார்.

பிரதமர் மோடியுடன் தேவ் தீபாவளி பண்டிகையில் உத்தரபிரதேச கவர்னர் ஆனந்திபென் படேலும், முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்தும் பங்கேற்கிறார்கள். இரவு 9 மணிக்கு மோடி டெல்லி திரும்புவார்.


Next Story