விவசாயிகளை தவறாக வழிநடத்த எதிர்க்கட்சிகள் வதந்திகளை பரப்புகின்றன - பிரதமர் மோடி


விவசாயிகளை தவறாக வழிநடத்த எதிர்க்கட்சிகள் வதந்திகளை பரப்புகின்றன - பிரதமர் மோடி
x
தினத்தந்தி 30 Nov 2020 11:20 AM GMT (Updated: 30 Nov 2020 11:20 AM GMT)

விவசாயிகளை தவறாக வழிநடத்த எதிர்க்கட்சிகள் வதந்திகளை பரப்புகின்றன என வாரணாசியில் பேசும் போது பிரதமர் மோடி கூறினார்.

வாரணாசி: 

பிரதமர் நரேந்திர மோடி, இன்று  தனது சொந்த தொகுதியான வாரணாசிக்கு சென்றார். அங்கு  பல்வேறு வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்தார்.

ஹாண்டியா - ராஜதலாப் இடையே ரூ.2,447 கோடி மதிப்பில்  அமைக்கப்பட்டுள்ள 6 வழிச்சாலையை திறந்து வைத்து பிரதமர் மோடி பேசியதாவது: 

வாரணாசியில் சுதந்திரம் அடைந்ததில் இருந்து செயல்படுத்தாத பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு உள்ளன.  புதிய நெடுஞ்சாலைகள், பாலங்கள். போக்குவரத்து நெரிசல்களைக் குறைக்க சாலைகளை அகலப்படுத்துதல் போன்றவைகள் செயல்படுத்தப்பட்டுள்ளன.

யோகி ஆதித்யநாத் உத்தரப்பிரதேச  முதல்வரானதிலிருந்து, உத்தரபிரதேசத்தில் உள்கட்டமைப்பு மேம்பாடு அடைந்துள்ளது. மாநிலத்தில் 12 விமான நிலையங்களை மேம்படுத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

 சமீபத்தில், விவசாயிகள் மற்றும் விவசாய உள்கட்டமைப்புகளுக்கு ரூ.1 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்பட்டது. வாரணாசியில் சரக்கு மையத்தை நிறுவுவதன் மூலம், இங்குள்ள விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை எளிதாக சேமித்து விற்க வசதி கிடைத்துள்ளது.இந்த சேமிப்பு திறன் காரணமாக, முதல்முறையாக, இங்குள்ள விவசாயிகளின் விளைபொருள்கள் அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. புதிய வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு புதிய வாய்ப்புகளையும் சட்டப் பாதுகாப்பையும் அளித்துள்ளன. விவசாயிகளின் நலனுக்காக சீர்திருத்தங்கள் செய்யப்படுகின்றன,இது அவர்களுக்கு கூடுதல் வாய்ப்புகளை வழங்கும். 

ஒரு விவசாயி தனது விளைபொருட்களை சிறந்த விலையையும் வசதிகளையும் கொடுப்பவர்களுக்கு நேரடியாக விற்க சுதந்திரம் பெற வேண்டாமா? சுவாமிநாதன் கமிஷனின் படி விவசாயிகளுக்கு ஒன்றரை மடங்கு அதிகமான எம்.எஸ்.பி வழங்குவதற்கான வாக்குறுதி நிறைவேற்றப்பட்டது. 

இந்த வாக்குறுதி காகிதத்தில் நிறைவேற்றப்பட்டது மட்டுமல்லாமல், விவசாயிகளின் வங்கிக் கணக்கையும் எட்டியுள்ளது. முன்பெல்லாம் அரசின் முடிவுகள் எதிர்க்கப்பட்டன. ஆனால் இப்போது வதந்திகள் எதிர்ப்பிற்கு அடிப்படையாகிவிட்டன. விவசாயிகளின் நலனுக்காக புதிய வேளாண் சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த புதிய சட்டங்களின் நன்மைகளை நாம் வரும் நாட்களில் காண்போம், அனுபவிப்போம். 

விவசாயிகளை தவறாக வழிநடத்த  எதிர்க்கட்சிகள் வதந்திகளை பரப்புகின்றன. புதிய வேளாண் சட்டங்கள்  மற்றும் சீர்திருத்தங்கள் விவசாயிகளுக்கு வருமானத்தை அதிகரிப்பதற்கான ஒரு திட்டமாகும். மேலும் அதை எதிர்க்கும் நபர்கள் கூட அதன் பலன்களைப் பெறுவார்கள் என கூறினார்.

Next Story