விவசாயிகள் போராட்டம்; பா.ஜ.க. தேசிய தலைவர் இல்லத்தில் மத்திய மந்திரிகள் ஆலோசனை


விவசாயிகள் போராட்டம்; பா.ஜ.க. தேசிய தலைவர் இல்லத்தில் மத்திய மந்திரிகள் ஆலோசனை
x
தினத்தந்தி 1 Dec 2020 6:33 AM GMT (Updated: 1 Dec 2020 6:33 AM GMT)

விவசாயிகள் போராட்டம் பற்றி ஆலோசனை மேற்கொள்ள பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா இல்லத்திற்கு மத்திய மந்திரிகள் வருகை தந்துள்ளனர்.

புதுடெல்லி,

விவசாயிகள் நலனை காக்கும் நோக்கில் மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவற்றை வாபஸ் பெற வலியுறுத்தியும் அரியானா, பஞ்சாப், கேரளா மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட ஆறு மாநில விவசாயிகள் டெல்லி சலோ (டெல்லி நோக்கி பேரணியாக செல்லுதல்) போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.  இந்த போராட்டம் இன்று 6வது நாளாக நீடிக்கிறது.

விவசாயிகள் போராட்டத்தில் வன்முறை ஏற்படாமல் தடுக்க டெல்லி போலீசார் எல்லை பகுதிகளில் குவிக்கப்பட்டு உள்ளனர்.  இதேபோன்று அரியானா மற்றும் பஞ்சாப் மாநில எல்லைகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

விவசாயிகள் போராட்டம் நடத்துவதற்கு புராரி பகுதியில், நிரான்கரி சமகம் மைதானத்தில் டெல்லி அரசு அனுமதி வழங்கியிருந்தது.  எனினும், சிங்கு, சம்பு மற்றும் திக்ரி எல்லை பகுதியிலும் விவசாயிகள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விவசாயிகள் சென்ற டிராக்டர்கள், டிரக்குகள் உள்ளிட்ட வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யப்பட்டது.  இதேபோன்று கொரோனா பரவல் ஏற்படாமல் தவிர்க்க மருத்துவ பரிசோதனைகளுக்கான முகாம்களும் அமைக்கப்பட்டன.

விவசாயிகள் பேரணியால் பிற மாநிலங்களில் இருந்து டெல்லி செல்லும் பயண போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது.  போராட்டம் எதிரொலியாக சிங்கு எல்லை இருபுறமும் இன்று மூடப்பட்டு உள்ளது.  இதேபோன்று திக்ரி எல்லை பகுதியும் வாகன போக்குவரத்துக்கு அனுமதி இன்றி மூடப்பட்டு உள்ளது.  பதுசராய் மற்றும் ஜதிகரா எல்லைகள் இரண்டு சக்கர வாகன போக்குவரத்துக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

அரியானா செல்லும் எல்லைகளான ஜரோடா, தன்சா, தவுராலா, கபாஷேரா, ரஜோக்ரி என்.எச். 8, பிஜ்வாசன், பாலம் விகார் மற்றும் தண்டஹேரா ஆகியவை திறந்து விடப்பட்டு உள்ளன.

இந்நிலையில், டெல்லி விஞ்ஞான் பவனில் இன்று மாலை 3 மணிக்கு பேச்சுவார்த்தைக்கு வரும்படி விவசாய அமைப்புகளின் தலைவர்களுக்கு மத்திய வேளாண் மந்திரி நரேந்திர சிங் தோமர் அழைப்பு விடுத்துள்ளார்.

இதுபற்றி டெல்லியில் பஞ்சாப் விவசாய சங்க கமிட்டியின் இணை செயலாளர் சுக்விந்தர் சபரான் செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, நாட்டில் 500க்கும் மேற்பட்ட விவசாய குழுக்கள் உள்ளன.  ஆனால் பேச்சுவார்த்தைக்கு 32 குழுக்களை மட்டுமே அரசு அழைத்து உள்ளது.  பிற குழுக்களுக்கு அழைப்பு விடப்படவில்லை.

அனைத்து குழுக்களும் பேச்சுவார்த்தைக்கு வரும்படி அழைப்பு விடப்படும் வரையில் நாங்கள் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள போவதில்லை என்று கூறியுள்ளார்.  தொடர்ந்து 6 நாட்களாக நீடித்து வரும் விவசாயிகள் போராட்டம் பற்றி ஆலோசனை மேற்கொள்வதற்காக பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா இல்லத்திற்கு மத்திய மந்திரிகள் வருகை தந்துள்ளனர்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க மத்திய மந்திரிகளான உள்துறை மந்திரி அமித்ஷா, வேளாண் மந்திரி நரேந்திர சிங் தோமர் மற்றும் பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் ஆகியோர் ஜே.பி. நட்டா இல்லத்திற்கு சென்றுள்ளனர்.

அவர்கள், விவசாயிகள் போராட்டம் பற்றி அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பதற்கான ஆலோசனையை மேற்கொண்டு உள்ளனர்.

Next Story