இந்தியாவில் கொரோனாவுக்கான சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 4.28 லட்சமாக குறைவு


இந்தியாவில் கொரோனாவுக்கான சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 4.28 லட்சமாக குறைவு
x
தினத்தந்தி 2 Dec 2020 7:29 PM GMT (Updated: 2 Dec 2020 7:29 PM GMT)

இந்தியாவில் 132 நாட்களுக்கு பிறகு, கொரோனாவுக்கான சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 4.28 லட்சமாக குறைந்துள்ளது.

புதுடெல்லி, 

கொரோனா வைரஸ் பெருந்தொற்று பரவல் கடந்த ஆகஸ்டு 7-ந் தேதி 20 லட்சம், 23-ந் தேதி 30 லட்சம், செப்டம்பர் 5-ந் தேதி 40 லட்சம், 16-ந்தேதி 50 லட்சம், 29-ந் தேதி 60 லட்சம், அக்டோபர் 11-ந் தேதி 70 லட்சம், 29-ந் தேதி 80 லட்சம் என 10 லட்சங்களை கடப்பதில் வேகம் காட்டிய தொற்று பரவல் கொஞ்சம் கட்டுப்படத்தொடங்கியது. நவம்பர் 20-ந் தேதி அது 90 லட்சத்தைக் கடந்தது. ஒரு நாள் பாதிப்பு கிட்டத்தட்ட 1 லட்சம் என்ற அளவுக்கு எல்லாம் வேகம் எடுத்தது. 

நேற்று காலை 8 மணியுடன் முடிந்த நாளில் நமது நாட்டில் புதிதாக 36 ஆயிரத்து 604 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் 10 லட்சத்து 96 ஆயிரத்து 651 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்ட நிலையில்தான் இந்த அளவு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதன்மூலம் நாட்டில் பரிசோதிக்கப்பட்டுள்ள மாதிரிகளின் எண்ணிக்கை 14 கோடியே 24 லட்சத்து 45 ஆயிரத்து 949 ஆக உயர்ந்துள்ளது என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் புள்ளி விவரம் கூறுகிறது.

நாட்டிலேயே கேரளாவில்தான் ஒரு நாளில் அதிகபட்சமாக 5,375 பேருக்கு கொரோனா வைரஸ் பாதித்துள்ளது. அதற்கு அடுத்த நிலையில் மராட்டியத்தில் 4,930 பேருக்கு புதிதாக வைரஸ் தாக்கி இருப்பது தெரிய வந்துள்ளது. நாட்டின் மொத்த கொரோனா பாதிப்பு, 94 லட்சத்து 99 ஆயிரத்து 413 ஆக அதிகரித்து இருக்கிறது.

கொரோனா வைரஸ் பெருந்தொற்று பாதித்து, பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் நேற்று ஒரே நாளில் 43 ஆயிரத்து 62 பேர் குணம் அடைந்து தங்கள் வீடுகளுக்கு திரும்பி உள்ளனர். இதன்மூலம் கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 89 லட்சத்து 32 ஆயிரத்து 647 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா மீட்பு விகிதம் 94.03 சதவீதமாக உயர்ந்துள்ளது.

நேற்று குணம் அடைந்து வீடு திரும்பியோரில் 6,290 பேர் மராட்டிய மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள். கேரளாவில் 6,151 பேர் கொரோனாவில் இருந்து மீண்டிருக்கிறார்கள். டெல்லியில் 5,036 பேர் கொரோனாவில் இருந்து குணம் அடைந்துள்ளனர். 77.25 சதவீதத்தினர் 10 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரே நாளில் கொரோனாவால் 501 பேர் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக மராட்டியத்தில் மட்டுமே 95 பேர் வைரஸ் பெருந்தொற்றுக்கு பலியாகி உள்ளனர். டெல்லியில் அதற்கு அடுத்த நிலையில் 86 பேர் இறந்திருக்கிறார்கள். மேற்கு வங்காளத்தில் 52 பேர், சத்தீஷ்காரில் 31 பேர், அரியானாவில் 28 பேர், உத்தரபிரதேசத்தில் 27 பேர், கேரளாவில் 26 பேர், இமாச்சலபிரதேசத்தில் 21 பேர் கொரோனாவுக்கு இரையாகி உள்ளனர்.

இந்த எண்ணிக்கைகளுடன் சேர்த்து இதுவரை இந்தியாவில் கொரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 38 ஆயிரத்து 122 ஆக உயர்ந்துள்ளது.

தொடர்ந்து மராட்டியம் 47 ஆயிரத்து 246 உயிர்ப்பலியுடன் நாட்டிலேயே முதல் இடத்தில் இருக்கிறது. கர்நாடகத்தில் 11 ஆயிரத்து 792 பேரும், டெல்லியில் 9,260 பேரும், மேற்கு வங்காளத்தில் 8,476 பேரும், உத்தரபிரதேசத்தில் 7,788 பேரும், ஆந்திராவில் 6,996 பேரும், பஞ்சாப்பில் 4,821 பேரும், குஜராத்தில் 4,004 பேரும், மத்திய பிரதேசத்தில் 3,270 பேரும் மரணம் அடைந்துள்ளனர்.

கொரோனா இறப்பு விகிதம் என்பது தொடர்ந்து 1.45 சதவீதமாக நீடிக்கிறது. தற்போது நாட்டில் கொரோனாவுக்காக பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 4 லட்சத்து 28 ஆயிரத்து 644 ஆக உள்ளது. இது மொத்த பாதிப்பில் 4.51 சதவீதம் ஆகும்.

132 நாட்களுக்கு பிறகு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை இந்த அளவுக்கு குறைந்து இருக்கிறது என மத்திய சுகாதார அமைச்சகம் சுட்டிக்காட்டுகிறது. இதற்கு முன்பு கடந்த ஜூலை மாதம் 23-ந் தேதி 4 லட்சத்து 26 ஆயிரத்து 167 பேர் சிகிச்சை பெற்றதாக பதிவாகி இருந்தது.

Next Story