கனரா வங்கியில் மோசடி; யுனிடெக் நிறுவன இயக்குனர் மற்றும் குடும்பத்தினர் மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு + "||" + Canara Bank fraud; CBI probes Unitech director and family Case record
கனரா வங்கியில் மோசடி; யுனிடெக் நிறுவன இயக்குனர் மற்றும் குடும்பத்தினர் மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு
கனரா வங்கியில் நடந்த மோசடி தொடர்பாக யுனிடெக் நிறுவன இயக்குனர் மற்றும் குடும்பத்தினர் மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்துள்ளது.
புதுடெல்லி,
கனரா வங்கியில் யுனிடெக் நிறுவனம் செய்த மோசடி தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர். இதில், யுனிடெக் நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் சஞ்சய் சந்திரா, அவரது தந்தை ரமேஷ் மற்றும் சஞ்சயின் சகோதரர் அஜய் ஆகியோர் மீது சி.பி.ஐ. புதிய வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ளது.
கனரா வங்கியில் ரூ.198 கோடி மதிப்பிலான பொதுமக்களின் பணம் முறைகேடு செய்யப்பட்டு உள்ளது என வங்கி குற்றச்சாட்டாக தெரிவித்துள்ளது.
டெல்லி திகார் சிறையில் கடந்த 43 மாதங்களாக அடைக்கப்பட்டிருந்த சஞ்சய்க்கு உடல்நல குறைவு காரணங்களை முன்னிட்டு டெல்லி நீதிமன்றம் வழங்கிய அனுமதியை தொடர்ந்து கடந்த 2 நாட்களுக்கு முன் அவர் இடைக்கால ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
இந்த சூழலில் சி.பி.ஐ. பதிவு செய்த வழக்கினை தொடர்ந்து, டெல்லி மற்றும் குருகிராம் பகுதியில் உள்ள, குற்றச்சாட்டு கூறப்பட்டவர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் இன்று சோதனை மேற்கொண்டனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
யுனிடெக் நிறுவனத்திற்கு எதிராக டெல்லி போலீசார், சி.பி.ஐ. மற்றும் அமலாக்க துறை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும் விசாரணை மேற்கொண்டு வருகிறது.