ஐபோன் தொழிற்சாலையை அடித்து நொறுக்கியதாக 7,000 பேர் மீது வழக்கு 160 பேர் கைது


ஐபோன் தொழிற்சாலையை அடித்து நொறுக்கியதாக 7,000 பேர் மீது வழக்கு 160 பேர் கைது
x
தினத்தந்தி 15 Dec 2020 3:01 AM GMT (Updated: 15 Dec 2020 3:01 AM GMT)

பெங்களூரு அருகே ஐபோன் தயாரிக்கும் விஸ்ட்ரான் நிறுவனத்தை அடித்து நொறுக்கியதாக, 7,000 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டு உள்ளது. 160 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கோலார்

கர்நாடக மாநிலம்  கோலாரில்  தைவானை சேர்ந்த  நிறுவனம் நடத்தும் ஐபோன்களை உற்பத்தி செய்யும்  விஸ்ட்ரான் நிறுவனம்  உள்ளது. விஸ்ட்ரான் லெனோவா மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனங்களுக்கான ஐடி தயாரிப்புகளையும் இது தயாரிக்கிறது. 

கடந்த சில மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை எனக்கூறி இதன் தொழிலாளர்கள் போராட்டம் நடத்தி வந்தனர்  தொழிலாளர்கள் சேரும் போது அவர்களுக்கு  வழங்கிய வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை.   என்றும், ஊழியர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் குறைந்து வருவதாகவும், சில தொழிலாளர்கள் தங்களுக்கு நான்கு மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை என்றும் குற்றம் சாட்டி உள்ளனர்.

இது தொடர்பாக தொழிலாளர்கள் அமைப்புகள்  நிர்வாகத்துடன் பேச்சு வார்த்தை நடத்தியது. ஆனால் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. இதை தொடர்ந்து ஆத்திரம் அடைந்த தொழிலாளர்கள்  கடந்த 12 ந்தேதி சனிக்கிழமை  அலுவலகத்தை முற்றுகையிட்டனர். தொழிலாளர்கள் கற்களை வீசிகண்ணாடி ஜன்னல்கள் மற்றும் கதவுகளை உடைத்தனர்  வாகனங்களுக்கு தீ வைத்தனர்.

இது தொடர்பாக விஸ்ட்ரானின் நிர்வாக அதிகாரி டி.டி.பிரசாந்த் போலீசாருக்கு புகார் அளித்தார். புகாரில் சேத மதிப்பு  ரூ .437 கோடியாக இருக்கும் என்று நிறுவனம் மதிப்பிட்டுள்ளது. நான்கு கார்கள், இரண்டு கோல்ஃப் கார்கள், கேண்டீன் பகுதி, டிவிக்கள், லேப்டாப்கள்,  தொலைபேசிகள், உற்பத்தி இயந்திரங்கள், , ஒரு ஏடிஎம் இயந்திரம், தனிப்பட்ட ஆவணங்கள், பணம் மற்றும் பலவற்றை உள்ளடக்கியதாக இந்த சேதம் உள்ளது என  புகார் கூறப்பட்டு உள்ளது

இதுதொடர்பாக, 160 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.  தற்போது 7,000 பேர் மீது வழக்குப்பதிவுசெய்து உள்ளனர். அதில் 5,000 பேர் அடையாளம் தெரியாத ஒப்பந்த ஊழியர்கள் எனவும், காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story