புதிய நாடாளுமன்ற திட்டம் வீணானது: பிரதமருக்கு அதிருப்தி கடிதம் எழுதிய 69 முன்னாள் அதிகாரிகள்


புதிய நாடாளுமன்ற திட்டம் வீணானது:  பிரதமருக்கு அதிருப்தி கடிதம் எழுதிய 69 முன்னாள் அதிகாரிகள்
x
தினத்தந்தி 22 Dec 2020 10:44 PM GMT (Updated: 22 Dec 2020 10:44 PM GMT)

புதிய நாடாளுமன்ற திட்டம் வீணானது மற்றும் தேவையற்றது என பிரதமருக்கு முன்னாள் அதிகாரிகள் 69 பேர் கடிதம் எழுதியுள்ளனர்.

புதுடெல்லி,

டெல்லியில் புதிய நாடாளுமன்ற கட்டிடம் உள்ளிட்ட ‘சென்ட்ரல் விஸ்டா’ திட்டத்துக்கு பிரதமர் மோடி கடந்த 10ந்தேதி அடிக்கல் நாட்டினார்.

இந்நிலையில், இத்திட்டம், அது செயல்படுத்தப்படும் விதம் குறித்து அதிருப்தி தெரிவித்து, பிரதமர் நரேந்திர மோடிக்கு முன்னாள் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் பகிரங்க கடிதம் எழுதியுள்ளனர். அரசியல் சாசன நடத்தை குழு என்ற பெயரில் எழுதப்பட்டுள்ள அந்தக் கடிதத்தில், 69 ஓய்வுபெற்ற அதிகாரிகள் கையெழுத்திட்டுள்ளனர்.

அக்கடிதத்தில் அவர்கள், ‘நாடு கடினமான பொருளாதார சூழலில் இருக்கும்போது, கொரோனா தொற்றால் லட்சக்கணக்கானோர் பெரும் கஷ்டங்களை அனுபவிக்கும்போது, பகட்டு, படாடோபத்தை காட்டும் ஒரு திட்டத்துக்கு அரசு இவ்வளவு பெரும் தொகையை செலவிடுவது ஏன்? இந்த திட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே, அதிகாரிகளின் அதிகாரத்தனம்தான் தென்படுகிறது.

இத்திட்டத்துக்கு சுற்றுச்சூழல் அனுமதி பெறப்பட்டவிதமும் கவலையை ஏற்படுத்துகிறது. மேலும், நாடாளுமன்ற கட்டிடத்துக்கு முறைப்படி ஜனாதிபதிதான் அடிக்கல் நாட்டியிருக்க வேண்டும். தவிர, இந்த வழக்கு நிலுவையில் இருக்கும்போது அடிக்கல் நாட்டப்பட்டது நீதிமன்றத்தை மீறிய செயல்’ என்று தெரிவித்துள்ளனர்.

இந்த திட்டத்திற்கு ரூ.13,450 கோடி என திருத்தியமைக்கப்பட்ட திட்ட மதிப்பீடு செய்யப்பட்டு உள்ளது.  புதிய நாடாளுமன்ற திட்டம் வீணானது மற்றும் தேவையற்றது என பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஜவகர் சர்கார், ஜாவித் உஸ்மானி, சக்சேனா, அருணா ராய் உள்ளிட்ட 69 பேர் கையெழுத்திட்டும் உள்ளனர்.


Next Story