‘திருத்தங்களை ஏற்கமாட்டோம்’ - மத்திய அரசுடனான பேச்சுவார்த்தையில் பங்கேற்க விவசாயிகள் நிபந்தனை


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 24 Dec 2020 12:00 AM GMT (Updated: 23 Dec 2020 10:05 PM GMT)

வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராடி வரும் விவசாயிகள் மத்திய அரசுடனான பேச்சுவார்த்தைக்கு நிபந்தனை விதித்து உள்ளனர்.

புதுடெல்லி, 

வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி டெல்லியின் எல்லைகளை முற்றுகையிட்டு உள்ள பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான விவசாயிகள், தங்கள் போராட்டத்தை நாளுக்கு நாள் தீவிரப்படுத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மத்திய அரசு மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்ததால், தீர்வுக்கான முட்டுக்கட்டை நீடித்து வருகிறது.

இதனால் கொரோனா அச்சுறுத்தல் மற்றும் கடுமையான குளிர் உள்ளிட்ட பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் விவசாயிகள் தங்கள் போர்க்கோலத்தை தொடர்ந்து வருகின்றனர். இதனால் நேற்று 28-வது நாளை எட்டியும் போராட்டம் எவ்வித தொய்வும் இன்றி நடந்து வருகிறது.

முன்னாள் பிரதமர் சரண் சிங்கின் பிறந்த நாளான நேற்று விவசாயிகள் தினமாக நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி டெல்லி போராட்டக்களத்திலும் சிறப்பு நிகழ்வுகள் அரங்கேறின.

டெல்லியில் உள்ள சரண் சிங்கின் நினைவிடமான ‘கிசான் காட்’டில் ஏராளமான விவசாயிகள் மரியாதை செலுத்தினர். காஜிப்பூர் எல்லையில் சிறப்பு வழிபாடு நடந்தது.

முன்னதாக விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு அளிக்கும் விதமாக கிசான் தினமான நேற்று ஒரு வேளை உணவை தவிர்க்குமாறு நாட்டு மக்களுக்கு விவசாயிகள் அழைப்பு விடுத்திருந்தனர்.

விவசாய தினத்தையொட்டி டெல்லி போராட்டக்களங்களில் மேலும் ஏராளமான விவசாயிகள் நேற்று வந்திருந்தனர். குறிப்பாக பஞ்சாப்பில் இருந்து வயது முதிர்ந்த பெண் விவசாயிகள் உள்பட ஏராளமான விவசாயிகள் சிங்கு, திக்ரி உள்ளிட்ட போராட்ட பகுதிகளில் ஐக்கியமாகினர்.

இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கில், அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கு வருமாறும், இற்காக வசதியான ஒரு நாளை தேர்வு செய்து அறிவிக்குமாறும் விவசாயிகளை மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. இது தொடர்பாக மத்திய வேளாண் அமைச்சக இணை செயலாளர் விவேக் அகர்வால், 40 விவசாய அமைப்புகளுக்கு கடந்த 20-ந்தேதி கடிதம் எழுதியிருந்தார்.

அதன்படி மத்திய அரசுடனான அடுத்தகட்ட பேச்சுவார்த்தை குறித்து விவசாய அமைப்புகள் ஆலோசனை நடத்தின. குறிப்பாக விவசாய அமைப்புகளுக்கு இடையே நேற்று முன்தினமும், நேற்றும் அடுத்தடுத்து சந்திப்புகள் நடந்தன.

இதன் முடிவில் நேற்று மாலையில் விவசாய அமைப்புகளின் தலைவர்கள் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறுகையில், ‘அரசுடன் பேச்சுவார்த்தைக்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். ஆனால் அதற்கான வலுவான பரிந்துரைகளை எங்களுக்கு அனுப்ப வேண்டும். பேச்சுவார்த்தைக்கு அரசு திறந்த மனதுடன் வரவேண்டும்’ என்று கூறினர்.

வேளாண் சட்டங்களில் திருத்தம் மேற்கொள்வதாக கூறுவது அர்த்தமற்றது எனக்கூறிய அவர்கள், இந்த திருத்தங்களை ஏற்கமாட்டோம் என உள்துறை மந்திரி அமித்ஷாவிடம் ஏற்கனவே தெரிவித்து விட்டதாகவும் கூறினர்.

முன்னதாக விவசாயிகள் தினத்தையொட்டி நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய வேளாண் மந்திரி நரேந்திர சிங் தோமர், மத்திய அரசுடனான பேச்சுவார்த்தையை விவசாயிகள் தொடர்வார்கள் என நம்பிக்கை தெரிவித்தார்.

இது குறித்து அவர் கூறுகையில், ‘அரசின் பரிந்துரையை நமது விவசாய சங்கங்கள் பரிசீலிப்பார்கள் என எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. இந்த பிரச்சினையின் தீர்வை நோக்கி நாம் நகர்வோம் என நம்புகிறேன். ஒரு தேதியும், நேரமும் அவர்கள் ஒதுக்கினால், அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கு அரசு தயாராக இருக்கிறது. எந்தவொரு போராட்டத்துக்கும் பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காணப்பட்டிருக்கிறது என்பது வரலாறு’ என்று கூறினார்.

மற்றொரு நிகழ்ச்சியில் பேசிய அவர், ‘வேளாண் துறையை சீர்திருத்தும் நோக்கில் கடந்த 6 ஆண்டுகளாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த துறையில் இன்னும் பல பகுதிகளை சீர்திருத்த வேண்டியிருக்கிறது. அவற்றையும் அரசு மேற்கொள்ளும். விவசாயிகளின் பிரச்சினைகளை கேட்பதற்கு அரசு திறந்த மனதுடன் உள்ளது’ என்று தெரிவித்தார்.

இதற்கிடையே டெல்லியின் நொய்டாவில் கடந்த 2-ந்தேதி முதல் போராடி வரும் பாரதிய கிசான் யூனியன் (லோக்சக்தி) அமைப்பின் தலைவரான ஷியோ ராஜ் சிங், பிரதமர் மோடிக்கு ரத்தத்தில் கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர், ‘வேளாண் சட்டங்களை திரும்பப்பெறுங்கள். குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்யவும், விவசாயிகள் கமிஷன் அமைக்கவும் சட்டம் இயற்றுங்கள்’ என கோரிக்கை விடுத்துள்ளார்.

நொய்டா நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டு உள்ள இந்த கடிதம், மாவட்ட கலெக்டர் வழியாக பிரதமர் அலுவலகத்துக்கு முறைப்படி அனுப்பி வைக்கப்படும் என நொய்டா நகர நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.


Next Story