இந்தியாவின் அதிநவீன ஏவுகணை சோதனை வெற்றி


இந்தியாவின் அதிநவீன ஏவுகணை சோதனை வெற்றி
x
தினத்தந்தி 23 Dec 2020 10:14 PM GMT (Updated: 23 Dec 2020 10:14 PM GMT)

வானில் எதிரியின் இலக்கை அழிக்கும் இந்தியாவின் அதிநவீன ஏவுகணை சோதனை வெற்றிபெற்றது.

பாலசோர், 

தரையில் இருந்து புறப்பட்டு சென்று வானில் உள்ள எதிரியின் இலக்குகளை துல்லியமாக அழிக்கக்கூடிய நடுத்தர ரக அதிநவீன ஏவுகணையை (எம்.ஆர்.எஸ்.ஏ.எம்.), டி.ஆர்.டி.ஓ. என்று அழைக்கப்படுகிற இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு, இஸ்ரேல் விண்வெளி தொழில்நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கி உள்ளது. இந்த அதிநவீன ஏவுகணையை பொதுத்துறை நிறுவனமான பாரத் டைனமிக்ஸ் தயாரித்து வழங்குகிறது.

இந்த அதிநவீன ஏவுகணை சோதனை, ஒடிசா மாநிலம், பாலசோரில் நேற்று நடந்தது. இந்த ஏவுகணை ஏற்கனவே விண்ணில் செலுத்தப்பட்டிருந்த ஆளில்லா விண் வாகனம் ‘பான்ஷீ’யை மிக துல்லியமாக தாக்கியது. இதனால் இந்த ஏவுகணை சோதனை வெற்றி அடைந்துள்ளது.

இந்த ஒட்டுமொத்த நடவடிக்கையும் ரேடார்கள் மற்றும் எலெக்ட்ரோ ஆப்டிகோ கருவிகளால் கண்காணிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த ஏவுகணை சோதனைக்கு முன்னதாக பாலசோர் மாவட்ட நிர்வாகம், டி.ஆர்.டி.ஓ. அதிகாரிகளுடன் கலந்தாலோசனை செய்து, ஏவுதளத்தில் இருந்து 2.5 கி.மீ. சுற்றளவில் வசிக்கிற சுமார் 8,100 பேரை தற்காலிகமாக வெளியேற்றி அருகில் உள்ள தங்கும் மையங்களில் தங்க வைத்தது என வருவாய்த்துறையினர் தெரிவித்தனர்.


Next Story