ராஜஸ்தான்-அரியானா எல்லையில் 14வது நாளாக விவசாயிகள் போராட்டம்


ராஜஸ்தான்-அரியானா எல்லையில் 14வது நாளாக விவசாயிகள் போராட்டம்
x
தினத்தந்தி 27 Dec 2020 7:50 AM GMT (Updated: 27 Dec 2020 7:50 AM GMT)

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக ராஜஸ்தான்-அரியானா எல்லையில் 14வது நாளாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஜெய்பூர்,

புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெறும் கோரிக்கையில் உறுதியாக இருக்கும் விவசாயிகள், கொரோனா அச்சுறுத்தல், கடுமையான குளிர் போன்ற சவால்களை கருத்தில் கொள்ளாமல், டெல்லியின் எல்லைகளை ஒரு மாதத்திற்கும் மேலாக முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். 

போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்திய 5 சுற்று பேச்சுவார்த்தைகள் எந்தவித பலனையும் தரவில்லை. குறிப்பாக வேளாண் சட்டங்களில் திருத்தம் மேற்கொள்ளும் மத்திய அரசின் யோசனையை விவசாயிகள் நிராகரித்து விட்டார்கள். வேளாண் சட்டங்களை திரும்ப பெறுவதாக உறுதியளித்தால் பேச்சுவார்த்தைக்கு தயார் என விவசாயிகள் அறிவித்துள்ளனர். 

டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவாக நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டங்களும், போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன. விவசாய அமைப்புகள், இடதுசாரிகள் மற்றும் எதிர்கட்சிகள் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்துள்ளன.

இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த விவசாயிகள் இணைந்து ராஜஸ்தான்-அரியானா எல்லையில் உள்ள ஷாஜகான்பூர் பகுதியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தொடர்ந்து 14வது நாளாக அவர்களின் போராட்டம் நீடித்து வருகிறது. மத்திய அரசு வேளாண் சட்டங்களை திரும்ப பெறும் வரை தங்கள் போராட்டம் தொடரும் என ராஜஸ்தான் மாநில விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

Next Story