நாட்டில் நிலவும் சூழலை பயன்படுத்தி கஜானாவை நிரப்பிக்கொள்ள நினைக்கிறது,மத்திய அரசு மீது சோனியா தாக்கு
கடந்த ஆறரை ஆண்டுகளில் மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை உயர்த்தியதன் மூலம் ரூ.19 லட்சம் கோடி லாபம் ஈட்டியுள்ளது. கடந்த 73 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு விலை உயர்ந்துள்ளது என்று மத்திய அரசு மீது காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குற்றஞ்சாட்டி உள்ளார்.
புதுடெல்லி
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
மத்தியில் ஆளும் மோடி தலைமையிலான அரசு, கொரோனாவில் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பையும், நாட்டில் நிலவும் பேரிடரான சூழலை வாய்ப்பாகப் பயன்படுத்தி தனது கஜானாவை நிரப்பிக்கொள்ள நினைக்கிறது.
நாடு சுதந்திரமடைந்ததில் இருந்து முதல் முறையாக முக்கியமான முடிவு எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. ஒருபுறம் தேசத்துக்கு உணவு வழங்கும் விவசாயிகள் நியாயமான தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 44 நாட்களாக டெல்லியின் எல்லைகளில் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
அதே நேரத்தில் சர்வாதிகாரப் போக்கு கொண்ட, உணர்வற்ற, இரக்கமற்ற பா.ஜனதா அரசு, ஏழை மக்களின், நடுத்தர மக்களின் முதுகெலும்பை உடைப்பதில் முனைப்பாக இருக்கிறது.
கடந்த ஆறரை ஆண்டுகளில் மோடி அரசு பெட்ரோல், டீசல் உற்பத்தி வரியை உயர்த்தியன் மூலம் ரூ.19 லட்சம் கோடி ஈட்டியுள்ளது. இன்று கச்சா எண்ணெய் விலை பேரல் 50.96 டாலராகத்தான் இருக்கிறது. அதாவது லிட்டர் ரூ.23.43. இவ்வளவு குறைந்தபோதிலும் கூட, டீசல் விலை ரூ.74.38 ஆகவும், பெட்ரோல் விலை ரூ.84.20 ஆகவும் உயர்ந்துள்ளது.
கடந்த 73 ஆண்டுகளில் பெட்ரோல், டீசல் விலை உயர்வில் இதுதான் அதிகபட்சமாகும். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிந்தாலும், மக்களுக்கு நன்மை கிடைப்பதற்கு பதிலாக உற்பத்தி வரியை உயர்த்தி லாபம் ஈட்டுவதிலேயே மத்திய அரசு குறியாக உள்ளது. சமையல் கேஸ் சிலிண்டர் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது அது ஒவ்வொரு வீட்டின் பட்ஜெட்டையும் பாதிக்கிறது.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்குவதைப் போல், டீசல், பெட்ரோல் மீதான கலால் வரி இருக்க வேண்டும். விவசாயிகள் போராட்டத்துக்குச் செவி சாய்த்து, வேளாண் சட்டங்களை உடனடியாக மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்துகிறேன்.
என அதில் அவர் கூறி உள்ளார்.
Related Tags :
Next Story