உத்தர பிரதேசத்தில் சாராயம் குடித்த 4 பேர் பலி; 7 பேருக்கு சிகிச்சை
உத்தர பிரதேசத்தில் சாராயம் குடித்த 4 பேர் பலியான விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்க முதல் மந்திரி உத்தரவிட்டு உள்ளார்.
லக்னோ,
உத்தர பிரதேசத்தில் புலந்த்சாகர் மாவட்டத்தில் சிக்கந்தராபாத் பகுதியில் அமைந்த ஜீத்காதி கிராமத்தில் சிலர் நேற்றிரவு சாராயம் குடித்து உள்ளனர். இதன்பின்னர் அவர்கள் அனைவரும் தங்களது வீடுகளுக்கு சென்று விட்டனர்.
சில மணிநேரம் கழித்து, அவர்களுக்கு வாந்தி ஏற்பட்டு உள்ளது. நிலைமை மோசமடையவே அவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். எனினும், 4 பேர் உயிரிழந்து உள்ளனர்.
அவர்கள் சதீஷ் (வயது 35), கலுவா (வயது 40), ரஞ்சித் (வயது 40) மற்றும் சுக்பால் (வயது 60) என அடையாளம் காணப்பட்டு உள்ளனர். 7 பேர் மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விவகாரத்தில் குற்றவாளிகள் மற்றும் சாராய ஆலைக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டு உள்ளார். இதுபற்றி புலந்த்சாகர் மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு கூறும்பொழுது, இந்த விவகாரத்தில் காவல் நிலைய பொறுப்பு அதிகாரி உள்பட 3 போலீசார் சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளனர். சாராயம் விற்பனையாளரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது என கூறியுள்ளார்.
Related Tags :
Next Story