இந்திய எல்லைப்பகுதிக்குள் நுழைந்த சீன ராணுவ வீரர்; இந்திய ராணுவம் விசாரணை + "||" + Chinese soldier who entered the Indian border; Indian Army investigation
இந்திய எல்லைப்பகுதிக்குள் நுழைந்த சீன ராணுவ வீரர்; இந்திய ராணுவம் விசாரணை
இந்தியாவின் லடாக் எல்லைக்குள் தவறுதலாக நுழைந்த சீன ராணுவ வீரரை இந்திய ராணுவத்தினர் பிடித்தனர்.
லடாக்,
இந்தியா-சீனா எல்லைப் பகுதியில் உள்ள லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் இருநாட்டு வீரர்களிடையே கடந்த ஆண்டு ஜூன் 15 ஆம் தேதி மோதல் ஏற்பட்டது. இதில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே மோதல் போக்கு அதிகரித்தது. இரு நாடுகளும் எல்லை முழுவதும் படைகளை குவித்துள்ளன.
போர் பதற்றத்தை தணிக்கும் விதமாக பல்வேறு கட்டங்களாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தை நடைபெற்ற போதும் இரு நாடுகளும் எல்லையில் படைகளை குவித்து வைத்துள்ளது. இதனால், இந்திய-சீன எல்லையில் தொடர்ந்து அசாதாரண சூழல் நிலவி வருகிறது.
இந்நிலையில், லடாக் எல்லையில் உள்ள பான்காங் ஏரியின் தெற்கு கரை பகுதியில் இந்திய ராணுவத்தினர் நேற்று வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது, இந்திய எல்லைக்குள் சீன ராணுவ வீரர் நுழைவதை இந்திய ராணுவத்தினர் கண்டனர். இதனால், எல்லைதாண்டிய சீன வீரரை சுற்றிவளைத்த இந்திய ராணுவத்தினர், அந்த வீரரை பிடித்து விசாரித்தனர்.
அந்த விசாரணையில் சீன வீரர் தவறுதலாக இந்திய எல்லைக்குள் நுழைந்தது தெரியவந்தது. இந்த விவகாரம் தொடர்பாக சீன பாதுகாப்பு படையினருக்கு இந்திய படையினர் தகவல் கொடுத்தனர். இதையடுத்து பிடிபட்ட வீரரை சீனாவிடம் ஒப்படைக்கும் நடைமுறைகளை இந்திய ராணுவம் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.