7 மாநிலங்களில் பறவை காய்ச்சல் எதிரொலி; உயிரியல் பூங்காக்கள் தினமும் அறிக்கை அளிக்க உத்தரவு


7 மாநிலங்களில் பறவை காய்ச்சல் எதிரொலி; உயிரியல் பூங்காக்கள் தினமும் அறிக்கை அளிக்க உத்தரவு
x
தினத்தந்தி 10 Jan 2021 11:54 PM GMT (Updated: 10 Jan 2021 11:54 PM GMT)

7 மாநிலங்களில் பறவை காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், உயிரியல் பூங்காக்கள் தினசரி அறிக்கை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

புதுடெல்லி, 

கேரளா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், இமாசலபிரதேசம், அரியானா, குஜராத், உத்தரபிரதேசம் ஆகிய 7 மாநிலங்களில் பறவை காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. 7 மாநிலங்களில் 1,200-க்கும் மேற்பட்ட பறவைகள் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. டெல்லி, சத்தீஷ்கார், மராட்டியம் ஆகிய 3 மாநிலங்களில் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனை கூடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அவற்றின் முடிவுகள் வரவேண்டி உள்ளது.

இந்த நிலையில், உயிரியல் பூங்காவுக்குள் பாதிக்கப்பட்ட பகுதி அறிவிக்கப்பட்டால், மத்திய மாநில அரசுகளால் அறிவிக்கப்பட்ட கட்டுப்பாட்டு மண்டலத்துக்குள் உயிரியல் பூங்கா இருந்தால், அந்த பகுதி பறவை காய்ச்சல் இல்லாத பகுதியாக அறிவிக்கப்படும் வரையில் தினமும் மத்திய உயிரியல் பூங்கா ஆணைய அலுவலகத்துக்கு அறிக்கை அளிக்க வேண்டும். கண்காணிப்பு மற்றும் பறவை நிர்வாகத்தை வலுப்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையொட்டி மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் கீழ்வரும் மத்திய உயிரியல் பூங்கா ஆணையம் விடுத்துள்ள அறிக்கையில் கூறி உள்ள முக்கிய அம்சங்கள்:-

* உள்ளூர் பகுதிகளில், பறவைகள் பிரிவில் பார்வையாளர்கள் நுழைவு கண்காணிக்கப்பட்டு, கட்டுப்படுத்தப்படலாம். உயிரியல் பூங்காவினுள் நுழையும் அனைத்து வாகனங்களிலும் கிருமிநாசினி தெளிக்கப்படலாம். நீர்நிலைகள் கண்காணிக்கப்பட வேண்டும். செயற்கை நீர்நிலைகள் உலர விடப்பட வேண்டும்.

* பறவைகள் பரிமாற்ற திட்டங்கள் அடுத்த கட்ட அறிவிப்பு வரும் வரையில் நிறுத்தப்பட வேண்டும். புலம் பெயர்ந்த பறவைகளின் நுழைவுகள் கண்காணிக்கப்பட வேண்டும். பராமரிப்பாளர்களும் கிருமிநாசினி நெறிமுறையை பின்பற்ற வேண்டும். பி.பி.இ. என்னும் சுய பாதுகாப்பு உடைகளை அணிந்து, பின்னர் அழிக்கப்பட வேண்டும்.

* அனைத்து பறவை பிரிவுகளிலும் சுகாதார நெறிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story