வேளாண் சட்டங்களுக்கு எதிரான மனுக்கள் மீது சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை


வேளாண் சட்டங்களுக்கு எதிரான மனுக்கள் மீது சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை
x
தினத்தந்தி 11 Jan 2021 12:26 AM GMT (Updated: 11 Jan 2021 12:26 AM GMT)

வேளாண் சட்டங்களுக்கு எதிராகவும், விவசாயிகள் போராட்டம் தொடர்பாகவும் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள், சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வருகின்றன.

புதுடெல்லி, 

மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதுபோல், டெல்லியின் எல்லை பகுதிகளில் விவசாயிகள் நடத்தி வரும் முற்றுகை போராட்டம் தொடர்பாகவும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. வேளாண் சட்டங்களுக்கு எதிரான மனுக்கள் மீதான முந்தைய விசாரணையின்போது, விவசாய சங்கங்களுக்கும், மத்திய அரசுக்கும் இடையே ஆரோக்கியமான பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், விரைவில் இருதரப்பும் ஒரு முடிவுக்கு வர நல்ல வாய்ப்பு உள்ளதாகவும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், அடுத்தக்கட்ட விசாரணையை 11-ந் தேதிக்கு (இன்று) தள்ளி வைப்பதாக நீதிபதிகள் கூறினர். மத்திய அரசும் ஒப்புக்கொண்டது.ஆனால், கடந்த 7-ந் தேதி நடந்த மத்திய அரசு - விவசாய சங்கங்கள் இடையிலான 8-வது சுற்று பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது- இந்த பின்னணியில், வேளாண் சட்டங்களுக்கு எதிரான மனுக்கள், இன்று (திங்கட்கிழமை) விசாரணைக்கு வருகின்றன. தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான அமர்வு முன்பு இம்மனுக்கள் விசாரணைக்கு வருகின்றன. பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தநிலையில், இன்றைய விசாரணையில் சுப்ரீம் கோர்ட்டு எடுக்கப்போகும் நிலைப்பாடு, கவனத்தை ஈர்த்துள்ளது.

அதுபோல், விவசாயிகள் போராட்டம் தொடர்பான மனுக்களும் இன்று விசாரிக்கப்படுகின்றன.விவசாயிகள் போராட்டம் தொடர்ந்து நடக்க அனுமதிக்க வேண்டும் என்றும், போராட்டத்தில் கோர்ட்டு தலையிடாது என்றும் கடந்த மாதம் 17-ந் தேதி விசாரணையின்போது சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்தது.


Next Story