விவசாயிகள் போராட்டம்: டெல்லியில் என்ன நடந்து கொண்டிருக்கிறது? சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி கேள்வி


விவசாயிகள் போராட்டம்:  டெல்லியில் என்ன நடந்து கொண்டிருக்கிறது? சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி கேள்வி
x
தினத்தந்தி 11 Jan 2021 7:15 AM GMT (Updated: 11 Jan 2021 7:15 AM GMT)

விவசாயிகள் போராட்டத்தில் தற்கொலை நிகழ்வு, முதியோர், பெண்கள் பங்கேற்புக்கு சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி வேதனை தெரிவித்து உள்ளார்.

புதுடெல்லி, 

மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதுபோல், டெல்லியின் எல்லை பகுதிகளில் விவசாயிகள் நடத்தி வரும் முற்றுகை போராட்டம் தொடர்பாகவும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. வேளாண் சட்டங்களுக்கு எதிரான மனுக்கள் மீதான முந்தைய விசாரணையின்போது, விவசாய சங்கங்களுக்கும், மத்திய அரசுக்கும் இடையே ஆரோக்கியமான பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், விரைவில் இருதரப்பும் ஒரு முடிவுக்கு வர நல்ல வாய்ப்பு உள்ளதாகவும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், அடுத்தக்கட்ட விசாரணையை 11-ந் தேதிக்கு (இன்று) தள்ளி வைப்பதாக கூறினர். மத்திய அரசும் ஒப்புக்கொண்டது.  ஆனால், கடந்த 7-ந் தேதி நடந்த மத்திய அரசு மற்றும் விவசாய சங்கங்கள் இடையிலான 8-வது சுற்று பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது.

அதுபோல், விவசாயிகள் போராட்டம் தொடர்பான மனுக்களும் இன்று விசாரிக்கப்படுகின்றன. விவசாயிகள் போராட்டம் தொடர்ந்து நடக்க அனுமதிக்க வேண்டும் என்றும், போராட்டத்தில் கோர்ட்டு தலையிடாது என்றும் கடந்த மாதம் 17-ந் தேதி விசாரணையின்போது சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்தது.

விவசாயிகளுடனான பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தநிலையில், இன்றைய விசாரணையில் சுப்ரீம் கோர்ட்டு எடுக்கப்போகும் நிலைப்பாடு, கவனத்தை ஈர்த்துள்ளது.  இந்நிலையில், 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா, ராஷ்டீரிய ஜனதா தள எம்.பி. மனோஜ் கே. ஜா உள்ளிட்டோர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் இன்று விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டன.

இந்த மனுக்கள் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தன.  இவற்றின் மீது நடந்த விசாரணையில், வேளாண் சட்டங்கள் பற்றிய விவகாரம் நடத்தப்படும் விதம் வேதனை அளிக்கும் வகையில் உள்ளது.  என்ன பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது என எங்களுக்கு தெரியவில்லை? இந்த சட்டங்களை சில காலத்திற்கு தள்ளி போடலாமா? என தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார்.

சிலர் தற்கொலை செய்துள்ளனர்.  வயது முதிர்ந்தோர், பெண்கள் உள்ளிட்டோர் போராட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கின்றனர்.  என்ன நடந்து கொண்டிருக்கிறது? என கேள்வி எழுப்பிய தலைமை நீதிபதி, வேளாண் சட்டங்கள் சிறந்தவை என ஒரு மனு கூட தாக்கல் செய்யப்படவில்லை என கடிந்து கொண்டுள்ளார்.

Next Story