கர்நாடக மந்திரிசபை விரிவாக்கம்: 7 புதிய மந்திரிகள் பதவி ஏற்று கொண்டனர்


கர்நாடக மந்திரிசபை விரிவாக்கம்: 7 புதிய மந்திரிகள் பதவி ஏற்று கொண்டனர்
x
தினத்தந்தி 13 Jan 2021 4:38 PM GMT (Updated: 13 Jan 2021 4:38 PM GMT)

கர்நாடகத்தில் அமைச்சரவை விரிவாக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் புதிதாக 7 அமைச்சர்கள் புதன்கிழமை பதவியேற்றுக் கொண்டனர்.

பெங்களூரு

கர்நாடக மந்திரிசபையில் காலியாக உள்ள 7 இடங்களை நிரப்ப பா.ஜனதா மேலிடம் அனுமதி வழங்கியுள்ளது.

இதையடுத்து கர்நாடக மந்திாிசபையை விரிவாக்கம் செய்ய முதல்-மந்திரி எடியூரப்பா முடிவு செய்தார். அதனை நேற்று அதிகாரபூர்வமாக் அறிவித்தார்.

இந்த நிலையில் இன்று பிற்பகல் கவர்னர் மாளிகையில் எம்.டி.பி.நாகராஜ், உமேஷ் கட்டி, அரவிந்த் லிம்பாவலி, முருகேஷ் நிரணி, ஆர்.சங்கர், சிபி யோகேஸ்வர், அங்காரா எஸ் ஆகிய 7 பேருக்கு கர்நாடக கவர்னர்  வாஜுபாய் வாலா பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கர்நாடக முதல்வர் எடியூரப்பாவும் கலந்து கொண்டார்.

குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ்-ஜனதா தளம் (எஸ்) கூட்டணி அரசு 14 மாதங்களில் கவிழ்ந்தது. அதன் பிறகு முதல்-மந்திரியாக எடியூரப்பா கடந்த 2019-ம் ஆண்டு ஜூலை மாதம் 26-ந் தேதி பதவி ஏற்றார். அப்போது அவர் ஒருவர் மட்டுமே பதவி ஏற்றார். அதைத்தொடர்ந்து 3 வாரங்களுக்கு பிறகு அதே ஆண்டு ஆகஸ்டு மாதம் 20-ந் தேதி 17 மந்திரிகள் நியமிக்கப்பட்டனர். இதில் ஒரு பெண் மந்திரியும் அடங்குவார்.

பிறகு கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற சட்டசபை இடைத்தேர்தலுக்கு பிறகு மந்திரிசபை விரிவாக்கம் செய்யப்பட்டது. அதாவது கடந்த 2020-ம் ஆண்டு பிப்ரவரி 6-ந் தேதி நடைபெற்ற மந்திரிசபை விரிவாக்கத்தின்போது, புதிதாக 10 மந்திரிகள் பதவி ஏற்றனர். இவர்கள் அனைவரும் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் என்பதும், இவர்கள் காங்கிரஸ், ஜனதா தளம் (எஸ்) கட்சிகளில் இருந்து வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் 4-வது முறையாக தற்போது மந்திரிசபை விரிவாக்கம் செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story