பொன்னம்பல மேட்டில் மகரஜோதி வடிவாய் சுவாமி ஐயப்பன் காட்சி;பக்தர்கள் விண்ணதிர சரண கோஷம்


பொன்னம்பல மேட்டில் மகரஜோதி வடிவாய் சுவாமி ஐயப்பன் காட்சி;பக்தர்கள் விண்ணதிர சரண கோஷம்
x
தினத்தந்தி 14 Jan 2021 1:43 PM GMT (Updated: 14 Jan 2021 1:43 PM GMT)

சபரிமலை பொன்னம்பல மேட்டில் மகர ஜோதி வடிவாய் சுவாமி ஐயப்பன் காட்சி அளித்தார். பக்தர்கள் விண்ணதிர சரண கோஷம் எழுப்பினர்.

சபரிமலை: 

மண்டல, மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை கடந்த நவம்பர் மாதம் 15-ந் தேதி திறக்கப்பட்டது. பின்னர் 41 நாட்கள் சிறப்பு வழிபாடுக்கு பிறகு, கடந்த மாதம் 26-ந் தேதி மண்டல பூஜை நடந்தது. பின்னர் நடை சாத்தப்பட்டது.

கொரோனா பரவல் காரணமாக மண்டல பூஜை காலங்களில் குறைந்த அளவு பக்தர்களே தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். இதற்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. மண்டல பூஜை நிறைவு நாளில் மட்டும் 5 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

இந்த நிலையில் சிகர நிகழ்ச்சியான மகரவிளக்கு பூஜை இன்று நடைபெற்றது. மகரஜோதியை ஒட்டி ஐயப்பனுக்கு அணிவிக்கும் ஆபரணப் பெட்டி சரங்கொத்தி வந்தது . மன்னர் குடும்பத்தினரிடமிருந்து ஆபரணப் பெட்டியை தேசவம் போர்டு அதிகாரிகள் பெற்று தந்திரி, மேல்சாந்தியிடம் வழங்கினார்கள் . ஐயப்பனுக்கு ஆபரணங்கள் அணிவிக்கப்பட்ட பிறகு தீபாரதனை காட்டப்பட்டது.

மாலை 6.40 மணிக்கு சபரிமலை பொன்னம்பல மேட்டில் மகர ஜோதி வடிவாய் சுவாமி ஐயப்பன் காட்சி அளித்தார். பக்தர்கள் விண்ணதிர சரண கோஷம் எழுப்பினர். பொன்னம்பல மேட்டில் 3 முறை, அய்யப்பசாமி தீப ஜோதியாக பக்தர்களுக்கு காட்சி தருவார் என்பது ஐதீகம். வழக்கமாக ஜோதியை காண சபரிமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிவார்கள். கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு 5 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

Next Story