புதிய கொள்கை விதிமுறை மாற்றம்: ‘வாட்ஸ்-அப்’ நிறுவனத்துக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு


புதிய கொள்கை விதிமுறை மாற்றம்: ‘வாட்ஸ்-அப்’ நிறுவனத்துக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு
x
தினத்தந்தி 16 Jan 2021 8:05 PM GMT (Updated: 16 Jan 2021 8:05 PM GMT)

‘வாட்ஸ்-அப்’ நிறுவனத்தின் கொள்கை விதிமுறையில் புதிய மாற்றத்திற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

புதுடெல்லி,

சமூக வலைத்தளங்களில் ஒன்றான வாட்ஸ்-அப் நிறுவனம் அந்நிறுவன செயலியை உபயோகிப்பவர்களின் தனிப்பட்ட தகவல்களை பேஸ்புக்குடன் பகிர்ந்து கொள்ள ஒப்புதல் அளிக்கும் வகையில், புதிய விதிமுறைகளை பிப்ரவரி 8-ந் தேதி முதல் மாற்றம் செய்வதாக அண்மையில் அறிவித்தது.

இதற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில், கொள்கையில் மாற்றம் செய்வதாக அறிவித்த நடவடிக்கையை மே மாதம் வரை தள்ளி வைப்பதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

இதனிடையே, இது தொடர்பாக இந்திய வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வக்கீல் விவேக் நாராயண் சர்மா சுப்ரீம் கோர்ட்டில் நேற்று மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அதில், இந்தியாவில் சுமார் 4 கோடி பேர் வாட்ஸ்-அப் செயலியை தகவல் பரிமாற்றத்துக்கு மிக முக்கிய கருவியாக பயன்படுத்தி வருகின்றனர்.

இந்தநிலையில் அந்நிறுவனம் அறிவித்துள்ள புதிய கொள்கை விதிமுறை மாற்றம் மக்களின் அந்தரங்க உரிமைக்கு எதிராகவும், சுதந்திரமான வாழ்வுக்கு அச்சுறுத்தலாகவும் அமைந்துள்ளது.

நமது நாட்டில் வாட்ஸ்-அப் செயலிக்கு அனுமதி அளித்த மத்திய அரசு, மக்களின் அடிப்படை உரிமைகள் மீறப்படும்போது வேடிக்கை பார்க்கக் கூடாது.

எனவே, பயனாளர்களின் எவ்வித தகவலையும், தரவுகளையும் வாட்ஸ்- அப் மற்றும் பேஸ்புக் நிறுவனம் பிற நிறுவனங்களுக்கு பகிர்வதை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். வாட்ஸ்-அப் பயனாளர்களின் தகவல்களை பாதுகாக்கவும், நாட்டு பாதுகாப்பை கருதியும் அறிவிக்கப்பட்டுள்ள புதிய கொள்கை விதிமுறை மாற்றத்தை திரும்ப பெற வாட்ஸ்-அப் நிறுவனத்துக்கு உத்தரவிட வேண்டும் என கூறப்பட்டு இருந்தது.

இந்த பொதுநல மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story