டெல்லியில் தடுப்பூசி செலுத்திக் கொண்ட 51 பேருக்கு ஒவ்வாமை, ஐசியூவில் ஒருவர் அனுமதி


டெல்லியில் தடுப்பூசி செலுத்திக் கொண்ட  51 பேருக்கு ஒவ்வாமை, ஐசியூவில் ஒருவர் அனுமதி
x
தினத்தந்தி 17 Jan 2021 10:10 AM GMT (Updated: 17 Jan 2021 11:05 AM GMT)

டெல்லியில் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களில் 51 பேருக்கு லேசான ஒவ்வாமை ஏற்பட்டதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், அஸ்ட்ரா ஜெனகா நிறுவனம் இணைந்து கொரோனா தடுப்பூசியை உருவாக்கியுள்ளது. அந்த தடுப்பூசியை இந்தியாவில் உருவாக்க சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா அனுமதி பெற்றுள்ளது. கோவிஷீல்டு என்ற பெயரில் அந்நிறுவனம் கொரோனா தடுப்பூசி உருவாக்கியுள்ளது. அதேபோல், பாரத் பயோடெக் நிறுவனமும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும் இணைந்து கொரோனா தடுப்பூசியை உருவாக்கியுள்ளது. அந்த தடுப்பூசிக்கு கோவாக்சின் என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்த 2 தடுப்பூசிகளையும் அவசரகால பயன்பாட்டிற்கு கொண்டுவர மத்திய சுகாதாரத்துறை அனுமதியளித்தது. இதையடுத்து, நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி நேற்று பயன்பாட்டுக்கு வந்தது.  முதல்கட்டமாக சுகாதாரப்பணியாளர்களுக்கும், முன்கள ஊழியர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணி  நேற்று தொடங்கியது.  

இந்நிலையில், டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் காவலாளியாக பணியாற்றிய  நபருக்கும் இன்று கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. ஆனால், தடுப்பூசி செலுத்தப்பட்ட சில மணிநேரங்களில் அந்த நபருக்கு அலர்ஜி (ஒவ்வாமை) ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, ஒவ்வாமை ஏற்பட்ட அந்த நபர் உடனடியாக எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவரை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.  காவலாளியின் உடல் நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

மேலும், 51 பேருக்கு லேசான பக்க விளைவுகள் ஏற்பட்டதாகவும், அவர்கள் சிறிது நேர கண்காணிப்பிற்கு பிறகு வீடு திரும்பியதாகவும் டெல்லி அரசு அறிவித்துள்ளது. தடுப்பூசி திட்டம் துவங்கப்பட்ட முதல் நாளான நேற்று, டெல்லியில் 4 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.


Next Story