விவசாயிகளின் டிராக்டர் பேரணி அனுமதிக்கு டெல்லி காவல்துறை தான் முடிவு செய்யவேண்டும் - உச்ச நீதிமன்றம்


விவசாயிகளின் டிராக்டர் பேரணி அனுமதிக்கு டெல்லி காவல்துறை தான் முடிவு செய்யவேண்டும் - உச்ச நீதிமன்றம்
x
தினத்தந்தி 18 Jan 2021 9:10 AM GMT (Updated: 18 Jan 2021 9:10 AM GMT)

விவசாயிகளின் டிராக்டர் பேரணிக்கு தடை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், 'டெல்லிக்குள் யாரை, எத்தனை பேரை அனுமதிக்க வேண்டும் என டெல்லி காவல்துறை தான் முடிவு செய்யவேண்டும் என கூறியுள்ளது.

புதுடெல்லி

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராகவும், டெல்லி எல்லையில் நடந்து வரும் விவசாயிகள் போராட்டம் தொடர்பாகவும் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் நிலுவையில் உள்ளன.

கடந்த 12-ந் தேதி அந்த மனுக்களை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, வேளாண் சட்டங்களுக்கு இடைக்கால தடை விதித்தது. மேலும், வேளாண் சட்டங்களை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க 4 நிபுணர்கள் கொண்ட குழுவை அமைத்தது.

இந்த நிபுணர்களில் ஒருவரான பாரதீய கிசான் சங்க தேசிய தலைவர் பூபிந்தர்சிங் மான், குழுவில் இருந்து திடீரென விலகிக்கொண்டார்.

குடியரசு தினத்தன்று (26-ந் தேதி) டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்தப்போவதாக விவசாய அமைப்புகள் ஏற்கனவே அறிவித்துள்ளன. குடியரசு தின கொண்டாட்டத்தை சீர்குலைக்கும் வகையில் டிராக்டர் பேரணியோ அல்லது வேறுவகையான போராட்டங்களோ நடத்த இடைக்கால தடை விதிக்கக்கோரி டெல்லி போலீஸ் மூலமாக சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு மனு தாக்கல் செய்துள்ளது.

மத்திய அரசின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று பாரதீய கிசான் சங்கம் லோக்சக்தி என்ற விவசாய அமைப்பு, சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளது. நிபுணர் குழுவில் மீதியுள்ள 3 பேரையும் நீக்கிவிட்டு வேறு நபர்களை நியமிக்குமாறு கோரியுள்ளது.

இந்தநிலையில், சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ள இந்த மனுக்கள், இன்று விசாரணைக்கு வந்தது. தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான அமர்வு இவற்றை விசாரித்தது.

அதில், விவசாயிகள் பேரணி என்பது சட்டம் ஒழுங்கு சார்ந்தது. டெல்லிக்குள் யாரை அனுமதிக்க வேண்டும், எத்தனை பேரை அனுமதிக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கும் முதல் அதிகாரம் டெல்லி போலீசுக்கு தான் உள்ளது. இதில் உச்ச நீதிமன்றம் தலையிட முடியாது எனக்கூறி பேரணி தொடர்பான மனு மீதான விசாரணையை வரும் 20ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர். இதனால் தலைநகர் டெல்லியில் மேலும் பரபரப்பு கூடியுள்ளது.

Next Story