குடியரசு தின விழா அணிவகுப்பில் குழந்தைகளுக்கு அனுமதி இல்லை என அறிவிப்பு


குடியரசு தின விழா அணிவகுப்பில் குழந்தைகளுக்கு அனுமதி இல்லை என அறிவிப்பு
x
தினத்தந்தி 19 Jan 2021 7:38 AM GMT (Updated: 19 Jan 2021 7:38 AM GMT)

குடியரசு தின விழா அணிவகுப்பை பார்வையிட 15 வயதுக்கு கீழ் உள்ள குழந்தகளுக்கு அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

குடியரசு தின விழாவை முன்னிட்டு தலைநகர் டெல்லியில் நடைபெறும் ராணுவ அணிவகுப்பிற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இந்த ஆண்டு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக குடியரசு தின அணிவகுப்பில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. 

அதன்படி ஒவ்வொரு ஆண்டும் டெல்லி விஜய் சவுக்கில் ஆரம்பித்து, தேசிய மைதானம் வரை 8.2 கி.மீ. தூரத்திற்கு நடைபெறும் அணிவகுப்பு இந்த ஆண்டு 3.3 கி.மீ. ஆக குறைக்கப்பட்டுள்ளது. இந்த அணிவகுப்பை காண்பதற்கு சுமார் 1 லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்கள் வருகை தருவது வழக்கமாகும். ஆனால் இந்த ஆண்டு 25 ஆயிரம் பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குடியரசு தின விழாவில் நடைபெறும் கலாச்சார நிகழ்ச்சிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது.

மேலும் முதியோர்கள் மற்றும் குழந்தைகள் இதில் கலந்து கொள்ள வேண்டாம் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், 15 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் குடியரசு தின விழா அணிவகுப்பை பார்வையிட அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மூத்த அதிகாரி ஒருவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பார்வையாளர்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்றும் சமூக இடைவெளி உள்ளிட்ட அனைத்து கட்டுப்பாட்டு விதிகளும் பின்பற்றப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

Next Story