வேளாண் சட்டம் தொடர்பாக, 10வது கட்ட பேச்சுவார்த்தை தொடங்கியது


வேளாண் சட்டம் தொடர்பாக, 10வது கட்ட பேச்சுவார்த்தை தொடங்கியது
x
தினத்தந்தி 20 Jan 2021 9:23 AM GMT (Updated: 20 Jan 2021 9:23 AM GMT)

வேளாண் சட்டம் தொடர்பாக, 10வது கட்ட பேச்சுவார்த்தை தொடங்கியது.

புதுடெல்லி,

மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்பப்பெறக்கோரி டெல்லி எல்லையில் விவசாயிகள்  போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர விவசாய சங்கங்களுக்கும், மத்திய அரசுக்கும் இடையே 9 கட்டங்களாக பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. ஆனால், 9 கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்துள்ளது. வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் என விவசாய அமைப்புகள் தங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளன.

அதேவேளை சட்டத்தில் திருத்தம் வேண்டுமானால் கொண்டுவரலாம் ஆனால், வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வாய்ப்பே இல்லை என மத்திய அரசு பிடிவாதமாக உள்ளது. இதனால், விவசாயிகளின் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில், வேளாண் சட்டங்கள் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதில் பிரச்சனைக்கு தீர்வுகாண உச்சநீதிமன்றம் குழு ஒன்றை அமைத்துள்ளது. மேலும், வேளாண் சட்டங்களை அமல்படுத்த தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றம் பேச்சுவார்த்தை குழு அமைத்துள்ளபோதும் விவசாயிகள் தங்கள் போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். விவசாய சங்களுக்கும், மத்திய அரசுக்கும் இடையேயான பேச்சுவார்த்தையும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், விவசாய சங்கங்கள் மற்றும் மத்திய அரசு இடையேயான 10-ம் கட்ட பேச்சுவார்த்தை இன்று தொடங்கியது. விக்யான் பவனில் விவசாயிகள் பிரதிநிதிகள் - மத்திய அரசின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது. ஏற்கனவே 9 முறை நடந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் இன்று 10ஆம் கட்ட பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படுமா என எதிர்பார்ப்பில் உள்ளது. பேச்சுவார்த்தைக்கு முன்பு அமித் ஷாவை சந்தித்து வேளாண் மந்திரி நரேந்திர சிங் தோமர் ஆலோசனை நடத்தினார்.

Next Story