வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடிய விவசாயி தற்கொலை


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 20 Jan 2021 10:42 PM GMT (Updated: 20 Jan 2021 10:42 PM GMT)

வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடிய விவசாயி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.

புதுடெல்லி, 

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக டெல்லியின் பல்வேறு எல்லைகளில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுதொடர்பாக விவசாய பிரதிநிதிகளிடம் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தியும் இதுவரை எந்த முடிவும் எட்டப்படவில்லை.

இந்த நிலையில், டெல்லியின் திக்ரி எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த அரியானா மாநிலத்தை சேர்ந்த ஜெய் பக்வான் ராணா (வயது42) என்ற விவசாயி நேற்று திடீரென ஷல்பாஸ் என்ற விஷமாத்திரைகளை தின்று தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு முன் அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தில், வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் விவசாயிகள் போராடுகின்றனர். ஆனால் இதை இரண்டு அல்லது மூன்று மாநிலங்களின் பிரச்சினை என மத்திய அரசு கூறுகிறது. விவசாயிகள் போராட்டம் இன்னும் ஒரு இயக்கமாக மாறாதது துரதிருஷ்டம் என்று தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக பஞ்சாபை சேர்ந்த வக்கீல் ஒருவரும், சந்த் ராம்சிங் என்ற சீக்கிய மதகுருவும் தற்கொலை செய்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story