பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை குறித்து 3 நாளில் தமிழக கவர்னர் முடிவெடுப்பார் சுப்ரீம் கோர்ட்டில். மத்திய அரசு தகவல்


பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை குறித்து 3 நாளில் தமிழக கவர்னர் முடிவெடுப்பார் சுப்ரீம் கோர்ட்டில். மத்திய அரசு தகவல்
x
தினத்தந்தி 21 Jan 2021 4:13 PM GMT (Updated: 21 Jan 2021 4:13 PM GMT)

பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை தொடர்பாக 3 நாளில் தமிழக கவர்னர் முடிவெடுப்பார் என சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தலைமை வக்கீல் துஷார் மேத்தா தகவல் தெரிவித்தார்.

புதுடெல்லி:

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நளினி, பேரறிவாளன், சாந்தன், முருகன், ராபர்ட் பயஸ், ஜெயகுமார், ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகின்றனர். இதனிடையே பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலை செய்ய 3 ஆண்டுகளுக்கு முன் தமிழக அரசு பரிந்துரைத்தது. இதன் மீது தமிழக கவர்னர் முடிவெடுக்காமல் உள்ளார்.

இந்நிலையில், கவர்னர் தாமதம் செய்வதால் சுப்ரீம் கோர்ட்டே தன்னை விடுவிக்க வேண்டும் என்று பேரறிவாளன் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நேற்று  விசாரணைக்கு வந்தது.

கவர்னர் முடிவு எடுப்பார்

அப்போது பேரறிவாளன் உள்ளிட்டோரை விடுவிக்க கவர்னருக்கு அதிகாரம் இல்லை, ஜனாதிபதிதான் முடிவெடுக்க வேண்டும் என்று மத்திய அரசு வக்கீல் நடராஜன் வாதம் செய்தார்.

இந்நிலையில் இன்று ஆஜரான மத்திய அரசு தலைமை வக்கீல் துஷார் மேத்தா, “அரசியல் சட்டம் 161-வது பிரிவின்படி மாநில அமைச்சரவை கூடி 7 பேரையும் விடுவிக்க 2018-ம் ஆண்டு செப்டம்பரில் முடிவெடுத்தது. தமிழக அரசின் பரிந்துரையை ஏற்று கவர்னர், 7 பேரையும் விடுதலை செய்யலாம் என சட்ட நிபுணர்கள் கூறினர். 7 பேரை விடுவிப்பதில் கவர்னருக்கு உடன்பாடு இல்லை எனில் தமிழக அரசிடம் விளக்கம் கேட்டு கோப்புகளை திருப்பி அனுப்பலாம் என கூறியுள்ளது. இந்த விவகாரத்தில் கவர்னர் இன்னும் 3 நாட்களில் முடிவு எடுப்பார்” என கூறினார்.

3 நாளில் தெரியும்

7 பேரை விடுவித்து கவர்னர் கையெழுத்திடுவாரா, அல்லது கோப்புகளை திருப்பி அனுப்புவாரா என்பது 3 நாளில் தெரியவரும். தேர்தல் நெருங்கும் நேரத்தில் பேரறிவாளன் விடுதலை பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது.

நேற்று முன்தினம் வரை விடுதலையை எதிர்த்தும், கவர்னருக்கு அதிகாரம் இல்லை என்றும் கூறி வந்த மத்திய அரசின் நிலையில் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளது. 7 பேரை விடுவிக்கும் அதிகாரம் கவர்னருக்கே உள்ளது என்பதை மத்திய அரசு ஏற்றுள்ளதை துஷார் மேத்தாவின் தகவல் உறுதி செய்துள்ளது.


Next Story