டிராக்டர் பேரணி தொடர்பான 2-ம் நாள் பேச்சுவார்த்தையிலும் இழுபறி: டெல்லி நகருக்குள் நடத்துவதில் விவசாயிகள் உறுதி


டிராக்டர் பேரணி தொடர்பான 2-ம் நாள் பேச்சுவார்த்தையிலும் இழுபறி: டெல்லி நகருக்குள் நடத்துவதில் விவசாயிகள் உறுதி
x
தினத்தந்தி 21 Jan 2021 11:30 PM GMT (Updated: 21 Jan 2021 9:16 PM GMT)

டிராக்டர் பேரணியை டெல்லி நகருக்குள் நடத்துவதில் விவசாய அமைப்புகள் உறுதியாக இருப்பதால், 2-வது நாள் பேச்சுவார்த்தையிலும் இழுபறி ஏற்பட்டுள்ளது.

புதுடெல்லி,

வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாய அமைப்புகள் குடியரசு தினத்தன்று டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்தப்போவதாக அறிவித்துள்ளன. அதற்கு இடைக்கால தடை விதிக்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு மனு தாக்கல் செய்தது.

ஆனால், சுப்ரீம் கோர்ட்டு தலையிட மறுத்து விட்டது.

டிராக்டர் பேரணி தொடர்பாக விவசாய அமைப்புகளுடன் டெல்லி, உத்தரபிரதேசம், அரியானா ஆகிய மாநில போலீஸ் அதிகாரிகள் டெல்லி விஞ்ஞான் பவனில் நேற்று முன்தினம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

நெரிசல் மிகுந்த வெளிவட்டச்சாலைக்கு பதிலாக குண்ட்லி-மானேசர்-பல்வால் விரைவுச்சாலை வழியாக நடத்துமாறு போலீசார் யோசனை தெரிவித்தனர். ஆனால், விவசாய அமைப்புகள் அதை நிராகரித்து விட்டன.

இந்தநிலையில், டெல்லி சிங்கு எல்லை அருகே உள்ள ஒரு சொகுசு விடுதியில் நேற்று 2-ம்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. விரைவுச்சாலையில் டிராக்டர் பேரணி நடத்துமாறு போலீசார் மீண்டும் கேட்டுக்கொண்டனர்.

ஆனால், விவசாய அமைப்புகள் ஏற்கவில்லை. இதனால் இழுபறி நிலவி வருகிறது.

இதுகுறித்து பேச்சுவார்த்தையில் பங்கேற்ற சுவராஜ் அபியான் தலைவர் யோகேந்திர யாதவ் கூறியதாவது:-

போலீசார் டெல்லிக்கு வெளியே டிராக்டர் பேரணி நடத்துமாறு வலியுறுத்தினர். ஆனால் அது சாத்தியமல்ல. நாங்கள் டெல்லி நகருக்குள் அமைதியாக பேரணி நடத்த விரும்புகிறோம் என்று அவர் கூறினார்.

மற்றொரு விவசாய சங்க தலைவரும் இதே கருத்தை தெரிவித்தார்.

Next Story