மத்திய அரசின் ‘லாலிபாப்’ மிட்டாயை விவசாயிகள் புறக்கணித்து விட்டார்கள்; காங்கிரஸ் விமர்சனம்


மத்திய அரசின் ‘லாலிபாப்’ மிட்டாயை விவசாயிகள் புறக்கணித்து விட்டார்கள்; காங்கிரஸ் விமர்சனம்
x
தினத்தந்தி 22 Jan 2021 2:49 PM GMT (Updated: 22 Jan 2021 2:49 PM GMT)

வேளாண் சட்டங்களை 18 மாதங்கள் நிறுத்தி வைக்கிறோம் எனும் மத்திய அரசின் லாலிபாப் மிட்டாயை விவசாயிகள் புறக்கணித்து விட்டார்கள். இதன் மூலம் விவசாயிகள் விழித்து கொண்டார்கள் என்று காங்கிரஸ் விமர்சனம் செய்துள்ளது.

புதுடெல்லி,

வேளாண் சட்டங்களை திரும்ப பெற கோரி விவசாயிகள் டெல்லி எல்லையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கிடையே 10-வது சுற்று பேச்சுவார்த்தையின் போது, மத்திய அரசின் சார்பில் விவசாயிகளிடம் ஒரு திட்டம் முன்வைக்கப்பட்டது.

இதன்படி, அடுத்த 18 மாதங்களுக்கு வேளாண் சட்டங்களை நிறுத்திவைப்பது என்றும், வேளாண் சட்டங்கள் குறித்து அமைக்கப்பட்ட குழுவில் அனைத்து தரப்பினரும் பேசி சுமுக முடிவு எடுத்தபின் முடிவெடுக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், மத்திய அரசின் இந்த திட்டம் குறித்து ஆலோசித்த விவசாயிகள் சங்கத்தினர், அதற்கு சம்மதிக்கவில்லை.

விவசாயிகள் சங்கத்தின் ஒருங்கிணைந்த அமைப்பான சம்யுக்த் கிசான் மோர்ச்சா வெளியிட்ட அறிக்கையில், மத்திய அரசு முன்வைத்த 18 மாதங்கள் வேளாண் சட்டங்களை நிறுத்திவைக்கும் எனும் முடிவை விவசாயிகள் சங்கம் புறக்கணிக்கிறது. வேளாண் சட்டங்களை முழுமையாக திரும்ப பெற வேண்டும் என்பதில் திட்டவட்டமாக இருக்கிறோம். குறைந்தபட்ச ஆதார விலையை உறுதி செய்ய சட்டம் கொண்டுவர வேண்டும். இதுவரை 147 விவசாயிகள் உயிரை தியாகம் செய்துள்ளார்கள். நாங்கள் இந்த கோரிக்கைக்கு ஒப்புக்கொண்டால், போராட்டம் பிளவுபடும். விவசாயிகளின் தியாகம் வீண்போகாது என தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையே விவசாயிகளுக்கும், மத்திய அரசுக்கும் இடையே மீண்டும் இன்று பேச்சுவார்த்தை நடந்தது. இந்த சூழலில் ராகுல் காந்தி தன்னுடைய டுவிட்டர் பதிவில் மத்திய அரசை விமர்சித்துள்ளார்.

அதில், நீங்கள் நாள்தோறும் வெளியிடும் வெற்று அறிக்கைகள், அட்டூழியங்களை நிறுத்துங்கள். வேளாண்துறைக்கு எதிரான சட்டங்களை திரும்ப பெற்றாலே போதுமானது என மத்திய அரசை சாடியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் தலைமை செய்தி தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா டுவிட்டரில் பதிவிட்ட கருத்தில், மோடிஜி, இந்திய விவசாயிகள் விழித்து கொண்டார்கள். நீங்கள் எப்போது விழிப்பீர்கள். மத்திய அரசு வழங்கிய லாலிபாப் மிட்டாயை விவசாயிகள் புறக்கணித்ததன் மூலம் விழித்து கொண்டோம் என்பதை வெளிப்படுத்திவிட்டார்கள் என தெரிவித்தார்.


Next Story