கொரோனா தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் பிரேசிலுடன் இணைந்து பணியாற்றுவது பெருமை - பிரதமர் மோடி


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 23 Jan 2021 4:28 AM GMT (Updated: 23 Jan 2021 4:28 AM GMT)

கொரோனா தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் பிரேசிலுடன் இணைந்து பணியாற்றுவது பெருமை என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

உலகிலேயே அதிகமாக கொரோனா தடுப்பூசிகளை உற்பத்தி செய்யும் நாடுகளில் ஒன்றான இந்தியாவுக்கு, பல்வேறு நாடுகளில் இருந்தும் இத்தடுப்பூசிக்கான ஆர்டர்கள் வரத் தொடங்கி உள்ளன.

இதன்படி மும்பை விமான நிலையத்தில் இருந்து 2 விமானங்கள் கொரோனா ‘கோவிஷீல்டு’ தடுப்பூசிகளை பிரேசில், மொராக்கோ நாடுகளுக்கு ஏற்றிச் சென்றன. நேற்று அதிகாலை, அந்த இரு விமானங்களிலும் தலா 20 லட்சம் தடுப்பூசிகள் ஏற்றிச் செல்லப்பட்டதாக மும்பை விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.

இதனைத்தொடர்ந்து மருந்து ஏற்றுமதி செய்ததற்கு பிரேசில் பிரதமர் ஜெய்ர் போல்சனரோ நன்றி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ஆஞ்சநேயர் சஞ்சீவி மலையை தூக்கிச் செல்லும், புகைப்படத்துடன் அவர் தனது டுவிட்டரில், “பிரேசில் நாட்டிற்கு கொரோனா தடுப்பூசி ஏற்றுமதி செய்து உதவிய இந்திய பிரதமர் மோடிக்கு நன்றி. உலகளாவிய நெருக்கடியை சமாளிக்க, சிறந்த நட்பு நாட்டை கொண்டிருப்பது பெருமைக்குரியது” என்று தெரிவித்திருந்தார். 

இந்நிலையில் இதற்கு பதலளிக்கும் விதத்தில் பிரதமர் மோடி தனது டுவிட்டரில், “கொரோனா தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் பிரேசிலுடன் இணைந்து பணியாற்றுவது பெருமைக்குரியது. சுகாதாரத்துக்கான எங்கள் ஒத்துழைப்பை நாங்கள் தொடர்ந்து பலப்படுத்துவோம்.” என்று பதிவிட்டுள்ளார். 




Next Story