எந்தெந்த வழியே டிராக்டர் பேரணி என எழுத்து வடிவில் அளித்த பின்னரே முடிவு: டெல்லி போலீசார்


எந்தெந்த வழியே டிராக்டர் பேரணி என எழுத்து வடிவில் அளித்த பின்னரே முடிவு:  டெல்லி போலீசார்
x
தினத்தந்தி 23 Jan 2021 4:50 PM GMT (Updated: 23 Jan 2021 4:50 PM GMT)

டெல்லியில் டிராக்டர் பேரணி எந்தெந்த வழியே நடத்தப்படும் என எழுத்து வடிவில் விவசாயிகள் விவரம் அளித்த பின்னரே அனுமதி பற்றி முடிவு செய்யப்படும் என டெல்லி போலீசார் கூறியுள்ளனர்.

புதுடெல்லி,

டெல்லி எல்லையில் பஞ்சாப், அரியானா உள்ளிட்ட மாநில விவசாயிகள் வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி கடந்த நவம்பர் 26ந்தேதியில் இருந்து கடும் குளிரிலும் தீவிர போராட்டம் நடத்தி வருகின்றனர்.  எனினும், வேளாண் சட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கும், மத்திய அரசுக்கும் இடையே உறுதியான எந்த முடிவும் எட்டப்படவில்லை.

இந்த சூழலில், இரு தரப்பினருக்கும் இடையே நேற்றுமுன்தினம் 10-வது சுற்று பேச்சுவார்த்தை நடந்தது. அதில், வேளாண் சட்டங்களை 18 மாதங்களுக்கு நிறுத்தி வைப்பதாகவும், சுமுக தீர்வு காண ஒரு கூட்டுக்குழுவை அமைப்பதாகவும் ஒரு திட்டத்தை மத்திய அரசு முன்வைத்தது.

18 மாதங்களுக்கு வேளாண் சட்டங்களை அமல்படுத்தாமல் நிறுத்தி வைக்க மத்திய அரசு ஒப்பு கொண்ட போதும் அவற்றை அடியோடு ரத்து செய்ய வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் வேளாண் சட்டங்கள் தொடர்பான விவகாரத்தில் மத்திய அரசுக்கும், விவசாயிகள் சங்கத்தினருக்கும் இடையே நேற்று நடந்த 11-வது சுற்று பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது.

விவசாயிகள் குடியரசு தினத்தன்று நாங்கள் டிராக்டர் பேரணியை நடத்துவோம் என தொடர்ந்து கூறி வந்தனர்.  இதற்கு அனுமதி வழங்குவதற்கு டெல்லி போலீசாருக்கே அதிகாரம் உள்ளது என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவில் தெரிவித்தது.

இந்நிலையில், டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்துவதுபற்றி ஸ்வராஜ் இந்தியா அமைப்பினை சேர்ந்த யோகேந்திர யாதவ் கூறும்பொழுது, வருகிற 26ந்தேதி குடியரசு தினத்தில் விவசாயிகளின் டிராக்டர் பேரணி நடத்தப்படும்.

இதற்காக தடுப்பான்கள் திறக்கப்பட்டு நாங்கள் டெல்லிக்குள் நுழைவோம்.  விவசாயிகள் மற்றும் டெல்லி போலீசார் இடையே ஒப்பந்தம் ஒன்று முடிவாகி உள்ளது.  இதுபற்றிய இறுதி விவரங்கள் இன்றிரவு முடிவு செய்யப்படும் என கூறினார்.

நாங்கள் வரலாற்று சிறப்புடைய மற்றும் அமைதியான பேரணியை நடத்துவோம்.  அது, குடியரசு தின அணிவகுப்புக்கோ அல்லது பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கோ எந்தவித பாதிப்பினையும் ஏற்படுத்திடாது என அவர் கூறியுள்ளார்.

பாரதீய கிசான் யூனியன் அமைப்பின் குர்னாம் சிங் சாதுனி செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, குழு வழங்கிய அறிவுறுத்தலை பின்பற்றி பேரணியில் கலந்து கொள்ளும் விவசாயிகள் கண்ணியம் காக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன் என கூறினார்.

இந்நிலையில், டெல்லி போலீசார் இதுபற்றி கூறும்பொழுது, போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள், குடியரசு தினத்தன்று டிராக்டர் பேரணி எந்தெந்த வழியே நடத்தப்படும் என்பது பற்றி எழுத்து வடிவில் எதுவும் அளிக்கவில்லை.

வருகிற 26ந்தேதி நடத்தப்படும் டிராக்டர் பேரணி எந்தெந்த வழியாக செல்லும் என்பது பற்றி விவசாயிகள் எழுத்து வடிவில் எங்களுக்கு விவரம் அளித்த பின்னரே நாங்கள் அதனை ஆய்வு செய்து அதன்பின்னர் ஒரு முடிவுக்கு வருவோம் என கூறியுள்ளனர்.

Next Story