மராட்டியத்தில் பா.ஜனதாவின் வளர்ச்சிக்கு பால் தாக்கரே தான் காரணம் - சஞ்சய் ராவத் பேட்டி


மராட்டியத்தில் பா.ஜனதாவின் வளர்ச்சிக்கு பால் தாக்கரே தான் காரணம் - சஞ்சய் ராவத் பேட்டி
x
தினத்தந்தி 24 Jan 2021 4:05 AM GMT (Updated: 24 Jan 2021 4:05 AM GMT)

மராட்டியத்தில் பா.ஜனதாவின் வளர்ச்சிக்கு பால்தாக்கரே தான் காரணம் என சிவசேனா செய்தி தொடர்பாளர் சஞ்சய் ராவத் கூறியுள்ளார்.

மும்பை, 

சிவசேனா நிறுவனர் பால் தாக்கரேவின் 95-வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி பல்வேறு அரசியல் தலைவர்கள் தாதர் சிவாஜி பார்க்கில் உள்ள பால்தாக்கரேயின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். இதில் சிவசேனாவை சேர்ந்த மூத்த தலைவரும், அந்த கட்சியின் செய்தி தொடர்பாளருமான சஞ்சய் ராவத் எம்.பி. அங்கு சென்று மரியாதை செலுத்தினார். 

அதன் பின்னர் சஞ்சய் ராவத் கூறியதாவது:-

மராட்டியத்தில் பா.ஜனதாவின் இந்த வளர்ச்சிக்கு பால் தாக்கரே தான் காரணம். சிவசேனா அவர்களுடன் இணையாமல் இருந்து இருந்தால், அவர்களால் ஊரக பகுதிகளில் கட்சியை பலப்படுத்தி இருக்க முடியாது.

நாடு, மராட்டியத்தின் நலனுக்காக மாற்று அரசியல் நிலைப்பாட்டை எடுத்து இருப்பதால் சிவசேனா தங்களது கொள்கையில் இருந்து விலகிவிட்டது என்று அர்த்தம் இல்லை. எல்லா கட்சிகளும் தங்கள் மாநிலம், நாடு மற்றும் மக்களின் நலன் கருதி அரசியல் நிலைப்பாட்டை எடுக்கவேண்டியது உள்ளது. அந்த முடிவில் நிலைத்து இருப்பதும், வெற்றி பெறுவதும் தான் முக்கியம். சிவசேனா அதை செய்து உள்ளது. இந்தியாவில் உத்தவ் தாக்கரே பிரபலமான முதல்-மந்திரியாக உள்ளார். பால் தாக்கரே மகிழ்ச்சி அடைந்து இருப்பார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story