பஞ்சாப் மட்டும் என்ன பாகிஸ்தானிலா உள்ளது? மத்திய அரசு மீது சரத் பவார் கடும் தாக்கு


பஞ்சாப் மட்டும் என்ன பாகிஸ்தானிலா உள்ளது? மத்திய அரசு மீது சரத் பவார் கடும் தாக்கு
x
தினத்தந்தி 25 Jan 2021 8:26 PM GMT (Updated: 25 Jan 2021 8:26 PM GMT)

போராடும் விவசாயிகள் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என மத்திய அரசு சொல்கிறது. பஞ்சாப் மட்டும் என்ன பாகிஸ்தானிலா உள்ளது? அதுவும் நம் நாட்டின் ஒரு பகுதிதான் என சரத் பவார் விமர்சித்துள்ளார்.

மும்பை, 

மும்பை ஆசாத் மைதானத்தில் மத்திய அரசு வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி விவசாயிகள் நேற்று போராட்டம் நடத்தினர். அவர்கள் ஆசாத் மைதானத்தில் இருந்து ராஜ்பவன் வரை பேரணியாக சென்று கவர்னர் பகத்சிங் கோஷ்யாரியை சந்தித்து கோரிக்கை மனு கொடுக்க இருந்தனர். ஆனால் கவர்னர் கோவா சென்று விட்டதால் அவரால் விவசாயிகளை சந்திக்க முடியவில்லை.

இதுகுறித்து அனைத்திந்திய விவசாயிகள் சங்கத் தலைவர் அசோக் தவாலே கூறுகையில், “ கவர்னர் ஜாலியாக இருக்க கோவாவுக்கு சென்று விவசாயிகளை அவமதித்து விட்டார். எனவே இனிமேல் கவர்னர் இடமோ அல்லது கவர்னரின் செயலாளரிடமோ கோரிக்கை மனுவை நாங்கள் கொடுக்கப் போவதில்லை. நாங்கள் எங்கள் கோரிக்கை மனுவை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திடம் கொடுக்க உள்ளோம்” என தெரிவித்தனர்

இந்தநிலையில் கவர்னர் 25-ந் தேதி மும்பையில் இருக்க மாட்டார் என்பது குறித்து முன்கூட்டியே விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விட்டதாக ராஜ்பவன் விளக்கம் அளித்துள்ளது

இதற்கிடையே விவசாயிகள் போராட்டம் இன்றும் மும்பையில் தொடர்கிறது. குடியரசு தினத்தையொட்டி இன்று ஆசாத் மைதானத்தில் தேசியக்கொடியை விவசாயிகள் ஏற்றுகின்றனர்.  தங்களின் போராட்டத்திற்கு அமோக ஆதரவு கிடைத்து இருப்பதாக விவசாய அமைப்பினர் தெரிவித்துள்ளனர். விவசாயிகள் போராட்டத்தை ஒட்டி மும்பை ஆசாத் மைதானத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. 

2 கம்பெனி மாநில ரிசர்வ் படை போலீசார் மற்றும் 800 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். மேலும் கொரோனா தொற்று அபாயம் இருப்பதால் சமூக இடைவெளியை கடைப்பிடிக்குமாறு போலீசார் போராட்டக்காரர்களிடம் அறிவுறுத்திக் கொண்டே இருந்தனர். இதேபோல விவசாயிகளுக்கு முக கவசம் சனிடைசர் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டன.

சரத் பவார் விமர்சனம்

இதற்கிடையே,  நடிகை கங்கனா ரணாவத்தை சந்திக்க ஆளுநருக்கு நேரம் இருப்பதாகவும் ஆனால், விவசாயிகளை சந்திக்க நேரம் இல்லை எனவும் தேசிய வாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் விமர்சித்துள்ளார். சரத் பவார் இது பற்றி கூறுகையில், “ மராட்டிய மாநிலம் இதுவரை இப்படி ஒரு ஆளுநரை கண்டதில்லை. அவருக்கு கங்கனா ரணாவத்தை சந்திக்க நேரம் இருக்கிறது. ஆனால், விவசாயிகளை சந்திக்க நேரம் இல்லை. ஆசாத் மைதானத்தில் போராடி வரும் விவசாயிகளை சந்திக்க வேண்டியது ஆளுநரின் தார்மீக கடமையாகும்” என்றார்.  

தொடர்ந்து பேசிய சரத் பவார், “குளிர், வெயில் என எதையும் பொருட்படுத்தாமல் விவசாயிகள் சுமார் 60 நாட்களாகப் போராடி வருகின்றனர். போராடும் விவசாயிகள் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என மத்திய அரசு சொல்கிறது. பஞ்சாப் மட்டும் என்ன பாகிஸ்தானிலா உள்ளது? அதுவும் நம் நாட்டின் ஒரு பகுதிதான். நாடாளுமன்றத்தில் இந்தச் சட்டத்தை அறிமுகப்படுத்திய போதே எதிர்க்கட்சிகள் இந்தச் சட்டங்களை எதிர்த்தோம். 

நாடாளுமன்ற குழுவிடம் இதை முதலில் அனுப்பலாம் என்ற கோரிக்கையை முன்வைத்தோம். ஆனால், பாஜக அரசு பெரும்பான்மை இருந்ததால், எவ்வித விவாதமும் இன்றி இச்சட்டத்தை நிறைவேற்றியது. இன்று எங்களுடன்(விவசாயிகள்) நீங்கள் இருக்கிறீர்கள். முதலில் விவசாய சட்டங்களைத் திரும்பப் பெறுங்கள் அதன் பின் பேச்சுவார்த்தை நடத்தலாம் என்பதே விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது” என்றார். 


Next Story