பாலசக்தி புரஸ்கார் விருது பெற்றவர்களுடன் கலந்துரையாடல்: குழந்தைகள் வாழ்வில் பின்பற்ற மோடி அறிவுறுத்திய 3 உறுதிமொழிகள்


பாலசக்தி புரஸ்கார் விருது பெற்றவர்களுடன் கலந்துரையாடல்: குழந்தைகள் வாழ்வில் பின்பற்ற மோடி அறிவுறுத்திய 3 உறுதிமொழிகள்
x
தினத்தந்தி 25 Jan 2021 10:47 PM GMT (Updated: 25 Jan 2021 10:47 PM GMT)

பாலசக்தி புரஸ்கார் விருது பெற்ற குழந்தைகளுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். அப்போது அவர் குழந்தைகள் வாழ்வில் பின்பற்றுவதற்கு மனதில் எடுத்துக்கொள்ள வேண்டிய 3 உறுதிமொழிகளை அறிவுறுத்தினார்.

பாலசக்தி புரஸ்கார் விருது
இந்தியாவில் கண்டுபிடிப்பு, விளையாட்டு, கலை, கலாசாரம், சமூக சேவை, கல்வி போன்ற துறைகளில் சாதனை படைக்கும் குழந்தைகளுக்கு பிரதம மந்திரி ராஷ்டிர பாலபுரஸ்காரின் கீழ் பால சக்தி புரஸ்கார் விருது வழங்கி ஆண்டுதோறும் சிறப்பு செய்யப்படுகிறது.

இந்த ஆண்டு இவ்விருதுக்கு தமிழகத்தின் பிரசித்தி சிங் உள்ளிட்ட 32 பேர் இவ்விருதை பெறுகின்றனர்.

குழந்தைகள் பங்களிப்புக்கு பாராட்டு

இந்த 32 குழந்தைகளுடன் பிரதமர் நரேந்திர மோடி நேற்று காணொலி காட்சி வழியாக கலந்துரையாடினார். அப்போது அவர் கூறியதாவது:-

கொரோனாவின் கடினமான காலகட்டத்தில், இந்த விருதை நீங்கள் பெறுவது சிறப்பு ஆகும். கொரோனா தொற்று பரவல் தடுப்பதற்காக அடிக்கடி கைகளை சுத்தம் செய்ய வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தியதில் குழந்தைகளின் பங்களிப்பு சிறப்பானது. இந்த விழிப்புணர்வு பிரசாரத்தை வெற்றி பெறச்செய்தீர்கள். ஒரு சிறிய யோசனைகூட சரியான செயலால் ஆதரிக்கப்படுகிறபோது, அதன் முடிவு சுவாரசியமாக அமையும்.

கடினமாக உழைக்கவேண்டும்....
நாட்டுக்காக கடினமாக உழைக்க வேண்டும். நாடு 75-வது சுதந்திர தினத்தை நெருங்கும் வேளையில், நீங்கள் என்ன செய்ய முடியும் என்பதை சிந்திக்க வேண்டும். நீங்கள் சுய சரிதைகளை வாசிக்க வேண்டும். அவை உங்களுக்கு ஊக்கம் அளிக்கும்.

நீங்கள் புகழ்ச்சிகளால் ஓய்வு எடுத்து விடக்கூடாது. உங்கள் வாழ்க்கையில் சிறந்த முடிவுகளை அடைய தொடர்ந்து பாடுபட வேண்டும்.

3 உறுதிமொழிகள்
குழந்தைகளாகிய நீங்கள் 3 உறுதிமொழிகளை மனதில் வைத்துக்கொள்ள வேண்டும்.

தொடர்ந்து நிலைத்து இருக்கவேண்டும் என்பதே முதல் உறுதிமொழி. செயல் வேகத்தை குறைக்கவே கூடாது.

இரண்டாவது, நாட்டுக்கான உறுதிமொழி. நாம் நாட்டுக்காக உழைத்தால், ஒவ்வொரு வேலையையும் நாட்டுக்காக செய்தால், அந்த வேலை சுயத்தை விட பெரிதாகும். 

மூன்றாவது, பணிவு ஆகும். ஒவ்வொரு வெற்றியும் நம்மை மிகவும் கண்ணியமாக இருக்க தூண்ட வேண்டும். ஏனென்றால் நம்முடையை பணிவு, மற்றவர்களுடன் நம் வெற்றியை கொண்டாட உதவும்.

இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

Next Story