5 அடுக்கு பாதுகாப்பு வளையத்தில் டெல்லி; குடியரசு தின விழாவில் ஜனாதிபதி தேசிய கொடி ஏற்றுகிறார்; பிரமாண்ட அணிவகுப்புக்கு ஏற்பாடு


5 அடுக்கு பாதுகாப்பு வளையத்தில் டெல்லி; குடியரசு தின விழாவில் ஜனாதிபதி தேசிய கொடி ஏற்றுகிறார்; பிரமாண்ட அணிவகுப்புக்கு ஏற்பாடு
x
தினத்தந்தி 25 Jan 2021 11:28 PM GMT (Updated: 25 Jan 2021 11:28 PM GMT)

தலைநகர் டெல்லி, 5 அடுக்கு பாதுகாப்பு வளையத்தின்கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. குடியரசு தின விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தேசிய கொடி ஏற்றுகிறார். தொடர்ந்து பிரமாண்ட அணிவகுப்பு நடைபெறுகிறது.

குடியரசு தின விழா கொண்டாட்டம்
இந்திய திருநாட்டின் குடியரசு தின விழா, தலைநகர் டெல்லியில் இன்று இரு பெரும்சவால்களுக்கு மத்தியில் நடக்கிறது. ஒன்று, கொரோனா வைரஸ் பெருந்தொற்று பரவல். மற்றொன்று, வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகள் நடத்தி வருகிற தொடர் போராட்டமும், டிராக்டர் பேரணியும்.

குடியரசு தினவிழா கொண்டாட்டத்தின் முதல் நிகழ்வாக, போர் நினைவுச்சின்னத்தில், நாட்டுக்காக வீர மரணம் அடைந்த வீரர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்துகிறார்.

பிரதமர் மோடி அங்கிருந்து நேராக அணிவகுப்பை பார்வையிடுவதற்காக ராஜபாதை வருகிறார்.

ஜனாதிபதி தேசிய கொடி ஏற்றுகிறார்
அதைத் தொடர்ந்து ராஜபாதைக்கு வருகை தருகிற ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், அங்கு தேசிய கொடியை ஏற்றி வைத்து வணக்கம் செலுத்துகிறார். அங்கு தேசிய கீதம் இசைக்கப்படும்.

அதையடுத்து அங்கு அமைக்கப்பட்டுள்ள சிறப்பு மேடையில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தலைவர்கள் அமர்ந்து அணிவகுப்பை பார்வையிடுவார்கள். அணிவகுப்பில் முதல் முறையாக ரபேல் போர் விமானம் இடம் பெறுகிறது. இந்தியாவின் படை பலத்தையும், கலாசார செழுமையையும் அணிவகுப்பு, உலகுக்கு பறை சாற்றும்.

கொரோனா தொற்றால்....
கொரோனா வைரஸ் தொற்றால், குடியரசு தினவிழா அணிவகுப்பை பல்லாயிரக்கணக்கான மக்களும், வெளிநாட்டு பிரமுகர்களும் கண்டுகளிக்க வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது.

இந்த ஆண்டு, குடியரசு தினவிழாவில் பங்கேற்க வரவிருந்த இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், தனது நாட்டில் கொரோனா வைரஸ் பெருந்தொற்று பரவலால் டெல்லி பயணத்தை ரத்து செய்து விட்டார். இதனால் சிறப்பு விருந்தினர் இன்றி இந்த குடியரசு தினவிழா நடைபெறுகிறது.

காலை 9.50 மணிக்கு விஜய் சவுக்கில் இருந்து அணிவகுப்பு தொடங்குகிறது. நேஷனல் ஸ்டேடியம் நோக்கி அணிவகுப்பு செல்லும். அலங்கார ஊர்திகள் மட்டும் செங்கோட்டை வரை செல்லும்.

5 அடுக்கு பாதுகாப்பு
குடியரசு தின விழாவில் கண்காணிப்பு பணியில் 6 ஆயிரம் பாதுகாப்பு படையினர் ஈடுபடுத்தப்படுகிறார்கள். சந்தேக நபர்களை அடையாளம் காண முக்கியமான 30 இடங்களில் போலீஸ் துறையின் முக அங்கீகார முறையும் அமைக்கப்பட்டுள்ளது.

ராஜபாதையில் 8 கி.மீ. தொலைவில் அணிவகுப்பு நடைபெறுவதால் அங்குள்ள உயர்ந்த கட்டிடங்களில் குறிபார்த்து சுடும் வீரர்கள் நிறுத்தப்படுகிறார்கள். சட்டம், ஒழுங்கை பராமரிப்பதற்காக டெல்லியை சுற்றிலும் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அணிவகுப்பு பாதையில் 140 ரகசிய கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

ராஜபாதையில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கொரோனா கால நெறிமுறைகைள பின்பற்றி 25 ஆயிரம் பேர் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள்.

குடியரசு தின விழா நிகழ்ச்சியை தொடர்ந்து விவசாயிகளின் டிராக்டர் பேரணி நடைபெறுவதால், பல முனைகளிலும் ஆயிரக்கணக்கான பாதுகாப்பு படையினர் நிறுத்தப்படுகின்றனர்.

டிராக்டர் பேரணியை சீர்குலைக்க சதி
விவசாயிகளின் டிராக்டர் பேரணியை சீர்குலைக்கும் சதித்திட்டத்துடன் பாகிஸ்தானில் 300 டுவிட்டர் கணக்குகள் உருவாக்கப்பட்டுள்ளதாக டெல்லி சிறப்பு போலீஸ் கமிஷனர் தீபேந்திர பதக் தெரிவித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றி அவர் மேலும் கூறுகையில், இது எங்களுக்கு சவாலான பணி ஆகும். ஆனால் குடியரசு தின அணிவகுப்பு முடிந்ததும் கடுமையான பாதுகாப்புக்கு மத்தியில் டிராக்டர் பேரணி நடைபெறும் என குறிப்பிட்டார்.

Next Story