டிராக்டர் பேரணி: டெல்லி செங்கோட்டையில் ஏறி விவசாயிகள் போராட்டம் - பதற்றம்


டிராக்டர் பேரணி: டெல்லி செங்கோட்டையில் ஏறி விவசாயிகள் போராட்டம் - பதற்றம்
x
தினத்தந்தி 26 Jan 2021 8:42 AM GMT (Updated: 26 Jan 2021 8:42 AM GMT)

டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்திவரும் விவசாயிகள் டெல்லி செங்கோட்டையை முற்றுகையிட்டுள்ளனர்

புதுடெல்லி, 

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி பஞ்சாப், ஹரியாணா மாநில விவசாயிகள் டெல்லியின் எல்லைப் பகுதிகளில் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக குடியரசு தினமான இன்று டெல்லியில் பிரம்மாண்ட டிராக்டர் பேரணி நடத்தப்படும் என்று விவசாயிகள் அறிவித்திருந்தனர். 

11 கட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால் 62வது நாளான இன்று டிராக்டர் பேரணியை விவசாயிகள் முன்னெடுத்து வருகின்றனர். இதற்காக ஆயிரக்கணக்கான டிராக்டர்களுடன் விவசாயிகள் டெல்லியில் குவிந்துள்ளனர்.

தற்போது புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் நடத்தும் டிராக்டர் பேரணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சிங்கு எல்லை, டிக்ரி எல்லை வழியாக போலீசாரின் தடுப்புகளை உடைத்துக் கொண்டு டெல்லிக்கு நுழைய முயன்றனர். அப்போது போலீசார் விவசாயிகள் மீது கண்ணீர் புகைக் குண்டு வீசி தடியடி நடத்தினர். 

அனுமதிக்கப்பட்ட நேரத்துக்கு முன்னதாகவே டெல்லிக்குள் நுழைந்ததாகக் கூறி விவசாயிகளை கலைக்க காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசியதாகக் கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. 

இந்நிலையில் டெல்லியில் டிராக்டர் பேரணியில் ஈடுபட்டிருந்த விவசாயிகள் தற்போது தலைநகர் டெல்லிக்குள் நுழைந்து செங்கோட்டையை முற்றுகையிட்டுள்ளனர். டெல்லி செங்கோட்டையில் ஏறி விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் பதற்றம் நீடித்து வருகிறது. இதனால் தலைநகர் டெல்லி போர்க்களமாக காட்சியளிக்கிறது

Next Story