கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட வாலிபர் ஒடிசாவில் பலி


கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட வாலிபர் ஒடிசாவில் பலி
x
தினத்தந்தி 27 Jan 2021 2:10 PM GMT (Updated: 27 Jan 2021 2:10 PM GMT)

ஒடிசா மாநிலத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட ஒருவர் புதன்கிழமை காலை உயிரிழந்ததாக மாநில சுகாதாரத்துறை இயக்குநர் தெரிவித்துள்ளார்.

புவனேஸ்வர்

மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் நாடு முழுவதும் கடந்த ஜனவரி 16 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதுவரை நாடு முழுவதும் நேற்று மாலை 7 மணிவரை 20.39 லட்சம் முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளதாக  மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், நாட்டில் அதிக பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்ட இரண்டாவது மாநிலமாக ஒடிசா உள்ளது.  இதுவரை ஒடிசா மாநிலத்தில் 1,77,000 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சுகாதாரத்துறை இயக்குநர் பிஜய் பனிகிராஹி புதன்கிழமை கூறியதாவது,

மத்திய அரசு ஒடிசாவிற்கு வழங்கப்பட்ட 3 லட்சம் கொரோனா தடுப்பூசிகளில் 1,77,000 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள 1,73,000 தடுப்பூசிகளை பிப்ரவரி 10 ஆம் தேதிக்குள் போடப்படும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும்,கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களில் 2 பேருக்கு பக்கவிளைவுகள் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதேசமயம், சம்பால்பூரில் உள்ள வீர் சுரேந்திர சாய் மருத்துவ நிறுவனத்தில் அனுமதிக்கப்பட்ட நுவாபாடா மாவட்டத்தைச் சேர்ந்த 27 வயதுடைய ஒருவர் இன்று காலை உயிரிழந்துள்ளார். அவர் ஜனவரி 23 அன்று கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர் ஆவார்.

இருப்பினும், மருத்துவ முதற்கட்ட தகவலின்படி, உயிரிழப்பிற்கான காரணம் கொரோனா தடுப்பூசியுடன் தொடர்புடைய பிரச்சினை இல்லை என்று தெரிவித்துள்ளார்.


Next Story