வேளாண் சட்டங்கள் எதிர்ப்பு; திக்ரி எல்லையில் அரை நிர்வாண போராட்டத்தில் விவசாயிகள்


வேளாண் சட்டங்கள் எதிர்ப்பு; திக்ரி எல்லையில் அரை நிர்வாண போராட்டத்தில் விவசாயிகள்
x
தினத்தந்தி 28 Jan 2021 6:31 AM GMT (Updated: 28 Jan 2021 6:31 AM GMT)

வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து திக்ரி எல்லையில் விவசாயிகள் அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

புதுடெல்லி,

வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி டெல்லியில், அரியானா மற்றும் பஞ்சாப் விவசாயிகள் 2 மாதங்களுக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அரசுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து தோல்வியை சந்தித்த சூழலில், குடியரசு தினத்தன்று டெல்லிக்குள் டிராக்டர் பேரணி நடத்துவோம் என விவசாயிகள் சங்கம் அறிவித்தது.

இந்த பேரணியில் விவசாயிகளில் ஒரு தரப்பினர் போலீசாரால் அனுமதிக்கப்பட்ட பகுதிகளை மீறி தடுப்புகளை உடைத்து கொண்டு முன்னேறினர்.  இதன்பின்னர் விவசாயிகள் தங்கள் கொடியை செங்கோட்டையில் ஏற்றினர்.  இதில், போலீசாருக்கும், விவசாயிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு மற்றும் மோதல் ஏற்பட்டது.

டெல்லியில் விவசாயிகளின் டிராக்டர் பேரணியில், ஒருவர் உயிரிழந்துள்ளார்.  போலீசார் சுட்டதால் ஒரு விவசாயி இறந்ததாக விவசாய சங்கங்கள் குற்றச்சாட்டு கூறின.  எனினும், விவசாயிகளின் இந்த குற்றச்சாட்டுக்கு, டெல்லி போலீசார் மறுப்பு தெரிவித்தனர்.  விவசாயிகள் தடுப்புகளை தாண்டி அத்துமீறிய போது, டிராக்டர் கவிழ்ந்து ஒருவர் உயிரிழந்ததாக போலீசார் விளக்கம் அளித்தனர்.

டெல்லியில் விவசாயிகளின் டிராக்டர் பேரணியால் சட்டம் மற்றும் ஒழுங்கு நிலையில் ஏற்பட்ட பாதிப்புகளை முன்னிட்டு சில பகுதிகளில் இன்டர்நெட் சேவையை முடக்கி மத்திய உள்விவகார அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டது.

டெல்லி பேரணியில் போலீசார் அளித்த அனுமதிக்கப்பட்ட பாதைகளை மீறி சிலர் தடுப்புகளை உடைத்து கொண்டு சென்றுள்ளனர்.  இதனால் அவர்களை தடுக்க முயன்ற 2 போலீசாருக்கு காயம் ஏற்பட்டு உள்ளது என முதற்கட்ட தகவல் வெளியானது.

இதன்பின் டெல்லி போலீசார் செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, டெல்லியில் விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியில், விவசாயிகள் கடுமையாக தாக்கியதில் 83 போலீசார் காயம் அடைந்து உள்ளனர் என தெரிவித்தனர்.

கிழக்கு டெல்லி பகுதியில் வன்முறையில் ஈடுபட்டதற்காக 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.  8 பேருந்துகள் மற்றும் 17 தனியார் வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டு உள்ளன என தெரிவிக்கப்பட்டது.  இதுவரை 19 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.  25 குற்ற வழக்குகள் பதிவாகி உள்ளன.

இந்நிலையில், டெல்லி போலீசின் துணை ஆணையாளர் சின்மொய் பிஸ்வால், சன்யுக்த கிசான் மோர்ச்சா என்ற விவசாய அமைப்பினை சேர்ந்த தர்சன் பால் என்பவருக்கு விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பியுள்ளார்.  அதில், குடியரசு தினத்தன்று போராட்டம் நடத்துவதற்கு குறிப்பிட்ட பாதைகளில் செல்ல டெல்லி போலீசார் வழங்கிய அனுமதிக்கான ஒப்பந்தம் மீறப்பட்டு உள்ளது.

இந்த விதிமீறலில் ஈடுபட்டதற்காக உங்கள் மீதும் மற்றும் உங்களுடைய கூட்டாளிகள் மீதும் ஏன் நடவடிக்கை எடுக்க கூடாது? என கேட்டு அதற்கு அடுத்த 3 நாட்களுக்குள் உரிய பதில் அளிக்கும்படி கேட்டுள்ளார்.

இந்நிலையில், டெல்லியில் டிராக்டர் பேரணியை முடித்து கொண்டு திரும்பிய விவசாயிகள், திக்ரி எல்லையில் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட தொடங்கியுள்ளனர்.  வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவற்றை வாபஸ் பெற வேண்டும் என வலியுறுத்தியும், கொடிகளை ஏந்தியபடி கோஷங்கள் எழுப்பியும் அவர்கள் அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டு விடாமல் தடுப்பதற்காக போலீசார் அதிக அளவில் எல்லை பகுதியில் பாதுகாப்பு பணிகளுக்காக குவிக்கப்பட்டு உள்ளனர்.

Next Story