வேளாண் சட்ட எதிர்ப்பு; டெல்லியில் திக்ரி எல்லையில் தொடரும் விவசாயிகள் போராட்டம்


வேளாண் சட்ட எதிர்ப்பு; டெல்லியில் திக்ரி எல்லையில் தொடரும் விவசாயிகள் போராட்டம்
x
தினத்தந்தி 29 Jan 2021 3:24 AM GMT (Updated: 29 Jan 2021 3:24 AM GMT)

டெல்லியில் திக்ரி எல்லையில் விவசாயிகள் இன்று காலை வேளாண் சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் மீண்டும் ஈடுபட்டு வருகின்றனர்.

புதுடெல்லி,

வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லியில் கடந்த 2 மாதங்களுக்கும் கூடுதலாக போராடி வருகின்றனர்.

இதில் ஈடுபட்டிருந்த சுமார் 41 அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் 11 சுற்று பேச்சுவார்த்தைகளை மத்திய அரசு நடத்தியது. ஆனால் அவை பலனளிக்காததால் போராட்டம் நீடித்து வருகிறது.

இந்த போராட்டத்தை தீவிரப்படுத்தும் நோக்கில் விவசாயிகள் குடியரசு தினத்தன்று டெல்லியில் மாபெரும் டிராக்டர் பேரணியை நடத்தினர். நாடு முழுவதிலும் இருந்து சுமார் 1 லட்சம் டிராக்டர்களில் லட்சக்கணக்கான விவசாயிகள் பேரணியாக டெல்லிக்குள் நுழைந்தனர்.

போலீசார் அனுமதிக்காத நேரத்தில், அனுமதிக்காத தடத்தில் பேரணி நடந்ததால், போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வன்முறையாக உருவெடுத்தது. இதில் பல வாகனங்கள், தடுப்பு வேலிகள் என ஏராளமான பொருட்கள் சேதப்படுத்தப்பட்டன. போலீசார் மற்றும் விவசாயிகள் தரப்பில் பலர் காயமடைந்தனர்.

இதைத்தொடர்ந்து போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் போராட்டக்காரர்களை அடித்து விரட்டினர். இதற்கு மத்தியிலும் விவசாயிகள் செங்கோட்டைக்குள் புகுந்து அங்கு மத கொடி ஒன்றை ஏற்றினர்.  இதன்பின்னர் போராட்டக்காரர்கள் மீண்டும் தங்களது பழைய போராட்ட களத்திற்கு திரும்பினர்.

இந்நிலையில், திக்ரி எல்லையில் விவசாயிகள் நேற்று காலை அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டனர்.  வன்முறையை தடுக்க மற்றும் பாதுகாப்பு பணிகளுக்காக போலீசாரும் அந்த பகுதியில் அதிகளவில் குவிக்கப்பட்டனர்.

சிங்கு எல்லையில் போராடி வரும் விவசாயிகள், உடனே அந்த பகுதியை காலி செய்து விட்டு அங்கிருந்து கிளம்ப வேண்டும் என கோரி உள்ளூர் மக்கள் சிலர் ஒரு குழுவாக சேர்ந்து அந்த பகுதியில் நேற்று திரண்டனர்.

அவர்கள் சிறிய அளவிலான தேசிய கொடிகளை கைகளில் ஏந்தியபடியும், கோஷங்களை எழுப்பியபடியும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

சிங்கு எல்லையில் இன்று காலை கடும் பனிப்பொழிவு ஏற்பட்டு உள்ளது.  இதனால் வெப்பநிலையும் குறைந்து காணப்படுகிறது.  தெளிவற்ற வானிலையால் போக்குவரத்து பாதிப்படைந்து வாகனங்கள் சாலையில் மெதுவாக செல்கின்றன.

இந்நிலையில், திக்ரி எல்லை பகுதியில் மீண்டும் இன்று காலை முதல் விவசாயிகள் வேளாண் சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட தொடங்கியுள்ளனர்.  இதனை முன்னிட்டு போலீசாரும் அதிக அளவில் பாதுகாப்பிற்காக அந்த பகுதியில் குவிக்கப்பட்டு உள்ளனர்.

Next Story