டெல்லி போலீசார் மீது தவறான குற்றச்சாட்டு; காங்கிரஸ் எம்.பி. சசி தரூர், பத்திரிகையாளர்கள் மீது எப்.ஐ.ஆர். பதிவு


டெல்லி போலீசார் மீது தவறான குற்றச்சாட்டு; காங்கிரஸ் எம்.பி. சசி தரூர், பத்திரிகையாளர்கள் மீது எப்.ஐ.ஆர். பதிவு
x
தினத்தந்தி 29 Jan 2021 5:55 AM GMT (Updated: 29 Jan 2021 5:55 AM GMT)

டெல்லி போலீசார் மீது தவறான குற்றச்சாட்டுகளை பதிவு செய்ததற்காக காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் மற்றும் பத்திரிகையாளர்கள் சிலர் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு உள்ளது.

போபால்,

வேளாண் சட்டங்களை திரும்ப பெறவேண்டும் என வலியுறுத்தி டெல்லியில், அரியானா மற்றும் பஞ்சாப் உள்ளிட்ட பல்வேறு மாநில விவசாயிகள் 2 மாதங்களுக்கும் மேலாக தொடர் போராட்டத்தில் தீவிரமுடன் ஈடுபட்டு வருகின்றனர்.  அரசுடன் நடத்தப்பட்ட 11 சுற்று பேச்சுவார்த்தைகள் தோல்வியை சந்தித்த சூழலில், குடியரசு தினத்தன்று டெல்லிக்குள் டிராக்டர் பேரணி நடத்துவோம் என விவசாயிகள் சங்கம் அறிவித்தது.

இதற்கு டெல்லி போலீசார் முதலில் அனுமதி மறுத்தனர்.  எனினும், ராஜபாதையில் குடியரசு தின அணிவகுப்பு முடிந்ததும் நண்பகல் 12 மணிக்கு பிறகு பேரணியை நடத்தி கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது. இதனை விவசாயிகளின் ஒரு தரப்பினர் ஏற்று கொண்டனர்.  ஆனால், மற்றொரு தரப்பினர் தடுப்புகளை உடைத்து கொண்டு டெல்லிக்குள் நுழைய முயன்றனர். டெல்லியின் சிங்கு மற்றும் திக்ரி எல்லைகளில் முகாமிட்டுள்ள விவசாயிகள், போலீஸ் தடுப்புகளை உடைத்து டெல்லி நகரத்திற்குள் நுழைந்தனர்.

அவர்களை பாதுகாப்பு அதிகாரிகள் தடுக்க முயன்றனர். ஆனால், விவசாயிகள் டிராக்டரை பயன்படுத்தி, தடுப்புகளை முட்டி மோதி, இடித்து உள்ளே நுழைந்தனர். தடையை மீறி உள்ளே நுழைந்தவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தி விரட்டினர். இதனால், அப்பகுதியில் பதற்றம் நிலவியது. அதே போல காஜிப்பூர் எல்லை வழியாக டெல்லிக்குள் நுழைந்த விவசாயிகள் மீது போலீஸ் கண்ணீர் புகை குண்டுகளை வீசியது.

இதனைத்தொடர்ந்து தண்ணீர் டாங்கிகளை பயன்படுத்தி விவசாயிகள் மற்றும் அவர்களது டிராக்டர் மீது போலீசார் தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். இருந்தபோதிலும் போலீசாரின் தடுப்புகளை கடந்த விவசாயிகள், டிராக்டர்களுடன் டெல்லி செங்கோட்டை பகுதிக்குள் நுழைந்தனர். அங்கு செங்கோட்டையின் முன் டிராக்டர்களை நிறுத்தியும், தேசிய கொடி கம்பத்தின் அருகே திரண்டு கோஷங்களையும் எழுப்பினர். மேலும் விவசாயிகள் ஆயுதங்களை சுழற்றியும், தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.  விவசாயிகள் மத கொடி ஒன்றை செங்கோட்டையில் ஏற்றினர்.

டெல்லியில் விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியில், ஒருவர் உயிரிழந்துள்ளார்.  போலீசார் சுட்டதால் ஒரு விவசாயி இறந்ததாக விவசாய சங்கங்கள் குற்றச்சாட்டு கூறின.  எனினும், விவசாயிகளின் இந்த குற்றச்சாட்டுக்கு, டெல்லி போலீசார் மறுப்பு தெரிவித்தனர்.

விவசாயிகள் தடுப்புகளை தாண்டி அத்துமீறிய போது, டிராக்டர் கவிழ்ந்து ஒருவர் உயிரிழந்ததாக போலீசார் விளக்கம் அளித்தனர்.  இதன்பின் டெல்லி போலீசார் செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, டிராக்டர் பேரணியில், விவசாயிகள் கடுமையாக தாக்கியதில் 83 போலீசார் காயம் அடைந்து உள்ளனர் என தெரிவித்தனர்.

கிழக்கு டெல்லி பகுதியில் வன்முறையில் ஈடுபட்டதற்காக 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.  8 பேருந்துகள் மற்றும் 17 தனியார் வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டு உள்ளன என தெரிவிக்கப்பட்டது.  19 பேர் கைது செய்யப்பட்டு, 25 குற்ற வழக்குகள் பதிவாகி உள்ளன என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் திருவனந்தபுரம் தொகுதி எம்.பி. சசி தரூர் தனது டுவிட்டர் பதிவில், குடியரசு தினத்தன்று நடந்த விவசாயிகள் பேரணியில் ஏற்பட்ட வன்முறையில் ஒருவரை டெல்லி போலீசார் கொன்று விட்டனர் என குற்றச்சாட்டாக பதிவிட்டுள்ளார் என கூறப்படுகிறது.

அவர் டுவிட்டரில் தவறாக பதிவிட்டதற்காகவும், அவதூறு பரப்புதல், தவறான மற்றும் தூண்டும் வகையிலான செய்திகளை பரப்புகிறார் என்ற அடிப்படையில் போலீசார் அவர் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ளனர்.  இதுதவிர 6 மூத்த பத்திரிகையாளர்கள் மற்றும் பிறர் மீதும் இதுபோன்ற குற்றச்சாட்டுகளுக்காக எப்.ஐ.ஆர். போடப்பட்டு உள்ளது.

இதேபோன்று, தவறான செய்திகளை பரப்புதல், நல்லிணக்க சீர்கேடுகளை பரப்புதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளும் பத்திரிகையாளர்கள் மீது எப்.ஐ.ஆரில் குறிப்பிடப்பட்டு உள்ளது.  இதேபோன்ற மற்றொரு எப்.ஐ.ஆர். ஒன்று உத்தர பிரதேசத்திலும் நேற்று பதிவு செய்யப்பட்டு உள்ளது.

Next Story