உத்தரகாண்ட் வெள்ளம்: 3 உடல்கள் மீட்பு; 3 ஹெலிகாப்டர்கள், 600 வீரர்கள் குவிப்பு


உத்தரகாண்ட் வெள்ளம்:  3 உடல்கள் மீட்பு; 3 ஹெலிகாப்டர்கள், 600 வீரர்கள் குவிப்பு
x
தினத்தந்தி 7 Feb 2021 10:11 AM GMT (Updated: 7 Feb 2021 10:11 AM GMT)

உத்தரகாண்டில் ஏற்பட்ட வெள்ள பெருக்கில் சிக்கிய 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு, தொடர்ந்து மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டு உள்ளன.

டேராடூன்,

உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் ஏற்பட்ட பனிச்சரிவால் தொளிகங்கா ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.  இந்த வெள்ளப்பெருக்கில் 100 முதல் 150 பேர் வரை பலியாகி இருக்கலாம் என அம்மாநில தலைமை செயலாளர் ஓம் பிரகாஷ் அச்சம் தெரிவித்துள்ளார்.

நந்திதேவி பனிக்குன்று உடைந்ததால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  
வெள்ளத்தில் அணை உடைந்ததால் ரிஷிகங்கா நீர்மின் நிலையம் சேதமடைந்துள்ளது.

தேசிய பேரிடர் மீட்பு படையை சேர்ந்த 3 குழுக்கள், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பப்பட்டு மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.  ஆற்றின் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.

உத்தரகாண்ட் வெள்ள மீட்பு பணியில் மாநில அரசுக்கு உதவுவதாக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா உறுதி அளித்துள்ளார்.

இந்திய ராணுவ வீரர்கள் 600 பேர் வரை வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர்.

இந்திய விமான படையின் இரண்டு மி-17 ரக ஹெலிகாப்டர்கள் மற்றும் ஏ.எல்.எச். துருவ் ஹெலிகாப்டர் ஒன்று என மொத்தம் 3 ஹெலிகாப்டர்கள் டேராடூன் மற்றும் அதனை அடுத்துள்ள பகுதிகளில் மீட்பு பணிகளுக்காக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.  தேவைக்கேற்றாற்போல் கூடுதல் ஹெலிகாப்டர்கள் கொண்டு வரப்படும் என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.  மீட்பு பணிகளுக்கான ஆலோசனை மேற்கொள்ள அமைச்சரவை கூட்டம் ஒன்றும் நடந்து வருகிறது.  மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினரும் அந்த பகுதிக்கு சென்றுள்ளனர்.

உத்தரகாண்டின் சமோலி மாவட்டத்தின் தபோவன் பகுதியில் ரேனி கிராமத்தில் ராணுவ வீரர்கள், 2 மருத்துவ குழுக்கள் மற்றும் பொறியியல் அதிரடி படை ஒன்றும் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன.  ராணுவ ஹெலிகாப்டர்களும் சென்றுள்ளன.

தபோவன் அணையில் சிக்கியிருந்த 16 பேரை போலீசார் மீட்டு பாதுகாப்பு பகுதிகளுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

Next Story