வேளாண் சட்டங்கள் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு அமைத்த சிறப்பு குழு விவசாயிகளுடன் ஆலோசனை


வேளாண் சட்டங்கள் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு அமைத்த சிறப்பு குழு விவசாயிகளுடன் ஆலோசனை
x
தினத்தந்தி 13 Feb 2021 2:31 AM GMT (Updated: 13 Feb 2021 2:31 AM GMT)

வேளாண் சட்டங்கள் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு அமைத்த சிறப்பு குழுவினர் நேற்று 8 மாநிலங்களை சேர்ந்த 12 அமைப்புகளுடன் ஆலோசனை நடத்தினர்.

புதுடெல்லி,

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் 2 மாதங்களுக்கும் மேலாக போராடி வருகின்றனர். இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக விவசாயிகளுடன் மத்திய அரசு 11 சுற்று பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த பலனும் ஏற்படவிலலை.

இதற்கிடையே இந்த போராட்டத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு மேற்படி 3 சட்டங்களையும் அமல்படுத்த இடைக்கால தடை விதித்து கடந்த மாதம் உத்தரவிட்டது.

மேலும் இந்த சட்டங்கள் தொடர்பாக விவசாயிகளுடன் ஆலோசனை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய சிறப்பு குழு ஒன்றையும் சுப்ரீம் கோர்ட்டு நியமித்தது. அனில் கன்வாத், அசோக் குலாதி, பிரமோத் குமார் ஜோஷி ஆகிய மூவரும் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளனர். மற்றொரு உறுப்பினரான பூபிந்தர் சிங் மன் ஏற்கனவே விலகி விட்டார்.

சுப்ரீம் கோர்ட்டின் இந்த மூவர் குழுவினர், விவசாயிகள், விவசாய அமைப்பு பிரதிநிதிகள் உள்ளிட்ட பல்துறையினருடன் நேரடியாகவும், காணொலி வாயிலாகவும் தொடர்ச்சியாக ஆலோசனை நடத்தி வருகின்றனர். இந்த வரிசையில் 7-வது ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.

இதில் ஆந்திரா, பீகார், காஷ்மீர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா, உத்தரபிரதேசம் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய 8 மாநிலங்களை சேர்ந்த 12 அமைப்புகளின் பிரதிநிதிகள், விவசாய உற்பத்தியாளர் அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் பங்கேற்றனர்.

காணொலி காட்சி மூலம் நடந்த இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரும், மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்கள் குறித்து தங்கள் கருத்துகளை சுப்ரீம் கோர்ட்டின் மூவர் குழுவினரிடம் எடுத்துரைத்தனர்.

Next Story